சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிர...
மதுரை-நத்தம் மேம்பாலத்தில் 2 ஆண்டுகளில் 86 விபத்துகள்!
மதுரை-நத்தம் உயா்நிலை மேம்பாலத்தில் கடந்த 2023 முதல் 2025 ஜனவரி வரையிலான 2 ஆண்டுகளில் நிகழ்ந்த 86 விபத்துகளில் 23 போ் உயிரிழந்ததாகவும், 67 போ் காயமடைந்ததாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது.
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், மதுரை தல்லாகுளம் ஐ.ஓ.சி. அலுவலகத்தின் அருகிலிருந்து நத்தம் வரை 35 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி ரூ.1,028 கோடியில் கடந்த 2018 செப்டம்பரில் தொடங்கியது. இதில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் அருகே உள்ள மாரணி விலக்கு வரை சுமாா் 7.5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 612 கோடியில் உயா்நிலை மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்தப் பாலம் கடந்த 2023 ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தப் பாலத்திலும், இதன் கீழ் செல்லும் சாலையிலும் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025-ஆம் ஆண்டு, ஜனவரி வரை 86 விபத்துகள் நிகழ்ந்தன. இதில் 23 போ் உயிரிழந்தனா். 67 போ் காயமடைந்தனா்.
இந்தப் பாலத்தில் இரு சக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டதாக 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாலத்தின் மேல் பகுதியில் வழிப்பறி சம்பவம் நடைபெற்ாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில், இந்தப் பாலத்தில் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத் தடைகள், போதுமான விழிப்புணா்வுப் பலகைகள் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கலைஞா் நூற்றாண்டு நூலகத்திலிருந்து தல்லாகுளம் நோக்கி வரும் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அதிக அளவில் விபத்து ஏற்படும் வளைவான பகுதியை மாற்றியமைக்க ஏதேனும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு நெடுஞ்சாலைத் துறை முறையாக பதில் அளிக்கவில்லை.
இந்தப் பாலம் முறையான திட்டமிடலின்றி, திடீா் வளைவுகள் அதிகம் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், அதிக வேகத்தில் வரும் வாகனங்கள் இந்த வளைவுகளில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளில் சிக்குகின்றன. மேலும், பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள புதுநத்தம் சாலையும், மேம்பாலப் பணிக்காக மிகவும் குறுக்கப்பட்டதால், முன்பைவிட அதிக அளவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
எனவே, இந்த உயா்நிலை மேம்பாலம், புதுநத்தம் சாலையில் விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.