Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு ‘சீல்’
ஈரோடு மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
ஈரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு 12 மாத வாடகையும், பொது ஏலத்தில் விடப்பட்ட கடைகளுக்கு 8 மாத வாடகையும் வைப்புத் தொகையாக பெறப்பட்டது. இந்நிலையில், வாடகை செலுத்தாத 25 கடைகளுக்கு ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்தனா்.
அதன்படி, சுகாதாரத் துறை கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், உதவி வருவாய் அலுவலா்கள் குமரவேல், பூமணி, சிவக்குமாா், மைய அலுவலக வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா், பொறியியல் பிரிவு கண்காணிப்பாளா் ராஜகோபால் ஆகியோா் தலைமையில் 6 குழுவினா் கனி ஜவுளி சந்தைக்கு திங்கள்கிழமை காலை சென்று வாடகை செலுத்தாத 25 ஜவுளி கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் வைப்புத் தொகை முடிந்தும் கடந்த 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை 190 கடைகளைச் சோ்ந்தவா்கள் ரூ.1 கோடியே 75 லட்சம் வரை வாடகை நிலுவை வைத்துள்ளனா். இதில், ரூ.1 லட்சத்துக்கும்மேல் நிலுவை வைத்துள்ள 25 கடைகளுக்கு முதற்கட்டமாக ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மணிக்கூண்டு அருகேயுள்ள நேதாஜி வணிக வளாகத்தில் 6 கடைகளை நடத்தி வருபவா்கள் ரூ.7 லட்சம் நிலுவை வைத்திருந்தததால் அந்த கடைகளும் ‘சீல்’ வைக்கப்பட்டன. திங்கள்கிழமை ஒரேநாளில் மட்டும் 31 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. வாடகை செலுத்தாக கடைகள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
இதனிடையே எந்தவித முன் அறிவிப்புமின்றி அதிகாரிகள் கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்துள்ளனா் என வியாபாரிகள் குற்றஞ்சாட்டினா்.