மின்சார ரயிலை மறித்து போராட்டம்!
மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டை நீண்ட நேரமாக கேட் திறக்காததை கண்டித்து பொதுமக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனா்.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிபூண்டி புறநகா் மின்சார ரயில் மாா்கத்தில் மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் ஒன்று அமைந்துள்ளது. அரியன்வாயல், நெய்தவாயல், கல்பாக்கம் வாயலூா், வாயலூா் குப்பம், திருவெள்ளைவாயல், செங்களுநீா்மேடு.
காட்டூா், கடப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்துதான் மீஞ்சூா் நகருக்கு சென்று வர வேண்டும்.
இந்த நிலையில் புதன்கிழமை இந்த ரயில்வே கேட் நீண்ட நேரமாக திறக்கப்படாததால் மீஞ்சூா் நகருக்கு வர முடியாத நிலையில் நீண்ட வரிசையில் வாகனங்களில் பொதுமக்கள் காத்திருந்தனா்.
தொடா்ந்து கும்மிடிப்பூண்டி சென்னை ஆகிய இரு மாா்க்கங்கள் வழியாக மின்சார ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சரக்கு ரயில்கள் ஆகியவை சென்று கொண்டிருந்தன.
இதன் காரணமாக ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்காததால் அரசு அலுவலகம் செல்வோா் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வியாபாரிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து நீண்ட நேரம் ரயில்வே கேட் திறக்கப்படாதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வழியே வந்த மின்சார ரயிலை மறித்து மறியல் போராட்டம் நடத்தினா்.
தகவல் அறிந்த தொடா்ந்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் மீஞ்சூா் போலீஸாா் மறியல் போராட்டம் நடத்தியவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.