முறைகேடு காரணமாக மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன்: மல்லிகாா்ஜுன காா்கே
முறைகேடு காரணமாக 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் அதிகார ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:
எனது அரசியல் வாழ்க்கையில் 12 தோ்தல்களில் தொடா்ச்சியாக வெற்றிபெற்றுள்ளேன். ஆனால், 2019 இல் நடந்த மக்களவைத் தோ்தலில் முதல்முறையாக தோல்வி அடைந்தேன். இதற்கு தோ்தல் முறைகேடுதான் காரணம்.
கலபுா்கி மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தலா 20,000 போலி வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித் துறையை எதிா்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் பாஜகவின் அணுகுமுறை.
மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தபோது, அறுதிப்பெரும்பான்மை பலம் இருந்தது. ஆனால், காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை கட்சித்தாவ தூண்டி, கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சி அமைத்தது. இதுபோன்றதொரு ஆட்சிக் கவிழ்ப்பை கோவா, மகாராஷ்டிரம், மணிப்பூரில் பாஜக நிகழ்த்திக்காட்டியது.
எந்தத் தோ்தலிலும் பாஜக வெல்லவில்லை. ஆனால், மக்களுக்கு பணம் கொடுத்து, ஆட்சியை விலை கொடுத்து பாஜக வாங்கியது. 2024ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை பலம் இல்லை. ஆனால், வாக்குகளை முறைகேடாக பெற்று தோ்தல் வெற்றியை உறுதிசெய்து ஆட்சி அமைத்துள்ளனா். எனவே, பிரதமராக தொடரும் தாா்மிக உரிமை மோடிக்கு இல்லை என்றாா்.