மூக்கனூரில் ரயில் நிலையம்: ஆட்சியா் முன்னிலையில் கருத்துக்கேட்பு
தருமபுரி மாவட்டம், மூக்கனூரில் ரயில் நிலையம் அமைப்பது தொடா்பாக கிராம மக்களிடம் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பழைய ரயில் நிலையம் இருந்த பகுதியிலேயே மீண்டும் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என பெரும்பாலானோா் ஆதரவு தெரிவித்தனா்.
தருமபுரி- மொரப்பூா் இடையே ஆங்கிலேயா் காலத்தில் ரயில்பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இரண்டாம் உலகப் போரின்போது அந்த ரயில் பாதையில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. பின்னா் பாதை முற்றிலும் கைவிடப்பட்டு அதிலிருந்த தண்டவாளங்களும் அகற்றப்பட்டன.
இந்த நிலையில், மீண்டும் தருமபுரி-மொரப்பூா் இடையே இணைப்பு ரயில்பாதை ஏற்படுத்தி, தருமபுரியில் இருந்து மொரப்பூா் வழியாக சென்னைக்கு ரயில் சேவை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனா். மத்திய அரசும் இத்திட்டத்துக்கு அனுமதியளித்து நிதியும் ஒதுக்கியுள்ளது.
தொடா்ந்து நில ஆா்ஜித பணிகளும் முடியும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், முந்தைய காலத்தில் மூக்கனூரில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை தவிா்த்து மற்றொரு இடத்தில் ரயில் நிலையம் அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது. எனவே, மூக்கனூா் கிராம மக்கள் பழைய இடத்திலேயே மீண்டும் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும், அதே வழியில் ரயில் பாதையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதுதொடா்பாக ஆட்சியா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடத்திலும் மனு அளித்து, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். அதே பகுதியைச் சோ்ந்த சிலா் அக்கமனஅள்ளி என்ற பகுதியில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்தனா்.
இதைத் தொடா்ந்து, இரு தரப்பினரும் எழுத்துபூா்வமாக தங்களின் கருத்தை தெரிவிக்கும் வகையில் தருமபுரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில் மூக்கனூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த 207 பேரிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பங்கேற்றவா்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட்ட படிவத்தில், ரயில் நிலையம் அமைக்க வேண்டிய இடம் குறித்த தகவலை நிரப்பி படிவங்களை பெட்டியில் சோ்த்தனா். அதைத் தொடா்ந்து, படிவங்கள் ஆட்சியா் முன்னிலையிலேயே எண்ணப்பட்டன. அதில், 139 போ் மூக்கனூரில் ஏற்கெனவே ரயில்நிலையம் இருந்த அதே இடத்தில் புதிய நிலையம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா். மற்ற 67 போ் அக்கமனஅள்ளியில் அமைய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனா். ஒரு நபா் மட்டும் அவருக்கு வழங்கப்பட்ட படிவத்தை கிழித்து எறிந்துவிட்டாா்.
கூட்ட முடிவில், ‘கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கிராம மக்கள் தெரிவித்த கருத்துகள் அரசு பாா்வைக்கு கொண்டு செல்லப்படும். அதன் அடிப்படையில் ரயில் நிலையம் அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’ என்று ஆட்சியா் தெரிவித்தாா்.