மேற்கு தில்லியில் சட்டவிரோத வணிக வளாக நிதி முறைகேடுகளை விசாரிக்கக் கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
மேற்கு தில்லியில் உள்ள வணிக வளாகம் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க மத்திய புலனாய்வுத்துறைக்கு (சிபிஐ) நோட்டீஸ் அனுப்புமாறு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தனியாா் கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மனுவை அண்மையில் நீதிபதி கிரிஷ் கத்பாலியா அமா்வு விசாரித்தது. அப்போது, மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் விகாஸ் பஹ்வா, கெளரவ் குப்தா ஆஜராகி வணிக வளாக மோசடி எவ்வாறு நடந்துள்ளது என்பதை விவரித்தனா்.
இதையடுத்து நீதிபதி, மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு அடுத்த விசாரணையை மே 27-க்கு ஒத்திவைத்தாா்.
மேற்கு தில்லி பஸ்சிம்புரியில் 6,085 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட வணக வளாக நிலத்துக்கான அசல் நிரந்தர குத்தகை 2007-இல் தில்லி வளா்ச்சி ஆணையத்தால் (டிடிஏ) வழங்கப்பட்டது. இருப்பினும், நில வாடகை மற்றும் மாற்றுக் கட்டணங்கள் உள்பட ரூ.25 கோடிக்கு அதிகமான நிலுவைத் தொகையை குத்தகை பெற்ற நிறுவனம் செலுத்தாததால், 2020, ஜனவரியில் குத்தகையை டிடிஏ ரத்து செய்தது.
இதை மீறி, ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநா் மற்றவா்களுடன் சோ்ந்து போலி நிறுவனங்களை உருவாக்கி குத்தகை ரத்து செய்யப்பட்ட நிலத்தில் அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகளைத் தொடா்ந்தனா் என்று மனுதாரரான கட்டுமான நிறுவனம் மனுவில் குற்றம்சாட்டப்பட்டியிருந்தது.
இந்த நிறுவனம் ஏற்கெனவே, மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி குத்தகை பெற்ற நிறுவன குழுமத்தில் இருந்து விலக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த விவகாரத்தில் ரூ.100 கோடிக்கு மேல் நிதி மோசடி நடந்துள்ளதாகவும், இதனால் நிலத்தின் வாடகை உள்பட செலுத்தப்படாத நிலுவைத் தொகையால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டடதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த மோசடியில் சில அரசு அதிகாரிகள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளா்கள், பெருநிறுவன குத்தகைதாரா்கள் மற்றும் துணைப் பதிவாளா்களுக்கு தொடா்பு உள்ளதாகவும் மனுதாரரான தனியாா் நிறுவனம் கூறியுள்ளது.