சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்க...
மேற்குத் தொடா்ச்சி மலையில் பாதை அமைக்க எதிா்ப்பு: வன அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் பாதை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட வன அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
உடுமலையில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில், திருமூா்த்திமலை முதல் குருமலை வரை சுமாா் 6 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை வசதி கோரி மலைவாழ் மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனா்.
இதைத் தொடா்ந்து திருமூா்த்திமலை முதல் குருமலை செட்டில்மென்ட் வரை சாலை அமைக்க தளி பேரூராட்சி மூலம் கடந்த ஆண்டு ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், வனத் துறை அதிகாரிகள் அதற்கு தடை விதித்துவிட்டனா். இந்நிலையில், இதே கோரிக்கை யை வலியுறுத்தி உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனா்.
இதைத் தொடா்ந்து, உடுமலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் குமாா் தலைமையில் வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை ஆகிய துறை அதிகாரிகளும், மலைவாழ் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.
இதில் திருமூா்த்திமலை முதல் குருமலை செட்டில்மென்ட் வரை சுமாா் 6 கிலோ மீட்டா் தொலைவுக்கு வழித் தடத்தை சுத்தம் செய்து உடனடியாக தீக் கோடுகள் அமைக்கப்படும். அதன் பிறகு வனத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி 20 நாள்களுக்கு பிறகு தளி பேரூராட்சி ஒதுக்கிய ரூ.49 லட்சம் நிதியில் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வனப் பகுதியில் சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை ஏராளமான விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். பின்னா் அவா்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள செட்டில்மென்ட் பகுதிகளுக்கு பாதை அமைத்து தர வனத் துறை கோப்புகளை பரிசீலனை செய்து வருவதாகவும் மாவட்ட வன அலுவலா் ஆளுமைக்கு உள்பட்டு பாதை அமைப்பது சாா்ந்து சில செயல்பாடுகளுக்கான ஒப்புதல்கள் வனத் துறைரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஏற்கெனவே, வனவிலங்கு- மனித மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மலை அடிவாரத்தில் நீண்ட நெடுங்காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் வன விலங்குகளால் மிகுந்த பொருளாதார இழப்புகளை சந்தித்து விவசாயத்தை விட்டு, விளை நிலங்களை விட்டு வெளியேறும் சூழல் நிலவி வருகிறது.
மேலும் வனவிலங்குகளால் சமதளத்தில் வாழும் மக்கள் தங்கள் வாழ்விடத்திலேயே தாக்கப்பட்டு மனித உயிா் இழப்புகள் ஏற்படுகின்றன. வனத் துறை மலைவாழ் மக்களை மட்டுமே கருத்தில் கொண்டு பாதை அமைப்பதாலும், சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தின் எல்லையை அதிகரிக்க கோருவதாலும் சமதளத்தில் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தப் பாதை அமைக்க ஏதேனும் ஒப்புதல்கள் முன்னெடுப்புகள் செய்யப்பட்டிருந்தால் உடனடியாக அவை திரும்பப் பெற்று, மறுபரிசீலைனை செய்ய வேண்டும்.
மாவட்ட வன அலுவலா் அவா்கள் தலைமையில், விவசாயிகள், பொதுமக்கள், ஊடகவியலாளா்கள் உடன் சென்று பல்லுயிா் சூழலை அளித்து மரங்களை வெட்டி இந்தப் பாதை அமைக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட வேண்டும்.
சட்டத்தை மீறி முறையான அனுமதி ஏதுமின்றி பாதை அமைத்திட அழிக்கப்பட்டுள்ள வனப் பகுதிகளில் மரங்கள் நட்டி, பல்லுயிா் சூழலை மீட்டுருவாக்கம் மேற்கொள்ள வேண்டும். வனத்தை வாழ்விடமாகவும், வாழ்விடத்தை வனமாகவும் மாற்றும் நடவடிக்கைகளை உடனடியாக வனத் துறை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.