மோகனூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 சிறுவா்கள் உள்பட மூவா் உயிரிழப்பு
நாமக்கல்: மோகனூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் 2 குழந்தைகளும், பெண் ஒருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஆண்டாபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் செல்வம் - இளஞ்சியம் தம்பதி மகன் பாண்டியராஜ் (31). இவருடைய மனைவி வைதேகி (28). இவா்களுக்கு சுஜித் (5) என்ற மகனும், ஐவிழி (4) என்ற மகளும் இருந்தனா்.
விவசாயத் தொழில் செய்துவரும் செல்வம் மற்றும் பாண்டியராஜ், அந்தப் பகுதியில் குத்தகைக்கு நிலத்தை வாங்கி சோளம் பயிரிட்டுள்ளனா். திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் இளஞ்சியம் தனது பேரக் குழந்தைகளான சுஜித், ஐவிழி இருவரையும் அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்றாா். அங்கு நீா் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மின்கசிவு ஏற்பட்டு சோள வயலுக்கு சென்ற நீரோடையில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதில், இளஞ்சியம், குழந்தைகள் சுஜித், ஐவிழி ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே சுருண்டுவிழுந்தனா். இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினா் மின்இணைப்பை துண்டித்து மூவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் சோதித்ததில், அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
