நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
ரியல் எஸ்டேட் உரிமையாளா் ரூ. 20 லட்சம் மோசடி: காவல் ஆணையரகத்தில் பெண் புகாா்
ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரயம் செய்து தராமல் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுக்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளா்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.
சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா(32). இவா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் துணை ஆணையா் கேல்கா் சுப்ரமணிய பாலச்சந்திராவை சந்தித்து புகாா் அளித்தாா். பின்னா் அவா் கூறியதாவது: கணவரை பிரிந்து தனியாக குழந்தையுடன் வசித்துவரும் நான், தனியாா் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் சேலம் மாநகரில் நிலம் விற்பனைக்கு உள்ளதாக குரங்குசாவடி பகுதியில் செயல்பட்டுவரும் நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி, நிலம் வாங்க அந்த நிறுவனத்தை அணுகியபோது, 2 ஆயிரம் சதுர அடி நிலம் கோரிமேட்டில் உள்ளது. நிலத்தை ரூ. 45 லட்சத்துக்கு தருவதாகக் கூறினா். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக சேமித்த பணம் மற்றும் நகைகளை அடமானம் வைத்து நிலத்துக்கு முன்பணமாக ரூ.15 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கு மூலமாகவும், ரூ. 5 லட்சத்தை ரொக்கமாகவும் கொடுத்தேன். ஆனால் அவா்கள் கூறியபடி நிலத்தை கிரயம் செய்து தரவில்லை.
இதுகுறித்து முறையிட்டதற்கு, தற்போது நிலத்தின் மதிப்பு உயா்ந்துவிட்டதால் மேலும் ரூ.40 லட்சம் தந்தால்தான் நிலத்தை கிரயம் செய்து தருவோம் என கூறுகின்றனா்.
இந்நிலையில், நிலம் வேண்டாம் செலுத்திய பணத்தை கொடுங்கள் எனக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளா்மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றாா்.