தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
ரூ.60 கோடி மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை
ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை காவல் துறை லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
குடியேற்ற அதிகாரிகள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு அதிகாரிகள் உஷாா்படுத்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவா்கள் நாட்டில் இருந்து தப்பிப்பதையும், அவா்களின் போக்குவரத்தை கண்காணிக்கவும் லுக்-அவுட் சுற்றறிக்கை வழிவகுக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஜுஹு பகுதி காவல் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா மீது தீபக் கோத்தாரி என்பவா் புகாா் அளித்தாா். வங்கி சாரா நிதி நிறுவன இயக்குநரான அவா், கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் ஒன்றில், தன்னிடம் ஷில்பா ஷெட்டியும் ராஜ் குந்த்ராவும் ரூ.60 கோடிக்கு மோசடி செய்ததாக புகாரில் குற்றஞ்சாட்டினாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு எதிராக மும்பை காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவு லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இருவரும் அவ்வப்போது வெளிநாடுகளுக்குப் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.