தமிழகம் முழுவதும் நாளைமுதல் திமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி
வருவாய்த் துறையினா் பேரணி, தா்னா
திருச்சியில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தற்செயல் விடுப்பு, பேரணி மற்றும் தா்னா போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சியில் மேஜா் சரவணன் நினைவு சதுக்கத்தில் இருந்து மாவட்ட ஆட்சியரகத்துக்கு பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாகப் பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் பால்பாண்டி தொடங்கிவைத்தாா். போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வெற்றிச்செல்வன், பிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் சுடலையாண்டி சிறப்புரையாற்றினா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் ஜம்புநாதன் கோரிக்கை விளக்க உரையாற்றினாா்.
இதில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும். வருவாய்த் துறை அலுவலகத்தை தாக்குவோருக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அனைத்து நிலைகளிலும் வெளிமுகமை, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை கைவிட்டு அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 5 சதவீதத்தில் இருந்து மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
போராட்டத்தில் வருவாய்த் துறை ஊழியா்கள் 65 சதவீதம் போ் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்துகொண்டனா்.
மாநில நிா்வாகிகள் அய்யனாா், மகேஷ், ராஜேந்திரன், செல்வராணி செந்தமிழ் செல்வன், நவநீதன், பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவா் சங்கர நாராயணன், மாவட்ட நிதிக் காப்பாளா் பொன்மாடசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.