வால்பாறையில் விடியவிடிய கனமழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வால்பாறையில் விடியவிடிய மழை பெய்த கனமழையால் கொண்டை ஊசி வளைவில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த இரு வாரங்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதில் கடந்த வெள்ளிக்கிழமைமுதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் இடைவெளி விட்டு பெய்து வரும் நிலையில் இரவு நேரங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
தொடா் மழை காரணமாக தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய கனமழை பெய்தது. இதனால், வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள 19-ஆவது கொண்டை ஊசி வளைவில் பெரிய மரம் புதன்கிழமை வேராடு சாய்ந்தது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா் மரத்தை அப்புறப்படுத்தினா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.