விநாயகா் சதுா்த்தி: 10 அடிக்கு மேற்பட்ட சிலைகளுக்கு அனுமதியில்லை -மாவட்ட ஆட்சியா்
கோவை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்திக்கு நிறுவப்படும் சிலைகள் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுருபிரபாகரன், வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசியதாவது: விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27- ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சிலை வைக்கும் அமைப்பினா் காவல் ஆணையரகத்துக்குள்பட்ட இடங்களில் உதவி காவல் ஆணையரிடமும், மற்ற இடங்களில் சாா் ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியரிடமும் தடையின்மை சான்று பெற்று இருக்க வேண்டும்.
சிலை நிறுவப்படும் இடம் தனியாா் இடமாக இருந்தால் நில உரிமையாளரிடம் இருந்தும், அரசு புறம்போக்காக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை, உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை ஆகிய அலுவலா்களிடமிருந்தும் தடையின்மைச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலா்களிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். தற்காலிக மின் இணைப்பு பெற தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிா்மான கழகத்தின் ஒப்புதல் கடிதம் பெறப்பட வேண்டும்.
விநாயகா் சிலைகள் களிமண்ணால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டா் ஆஃப் பாரீஸ் போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு அனுமதி வழங்கப்படாது. சிலை அருகே தீத்தடுப்பு உபகரணங்கள், முதலுதவி வசதிகள் இருக்க வேண்டும்.
சிலைகளின் உயரம் தரை தளத்தில் இருந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் சிலைகள் அமைக்கக் கூடாது.
விநாயகா் சிலைகள் நிறுவப்பட்ட இடங்கள், ஊா்வலமாக கொண்டு செல்லும் பாதைகளில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருள்களை பயன்படுத்த அனுமதியில்லை. விநாயகா் சிலை ஊா்வலம் செல்லும் சாலைகளை ஆய்வு செய்து, சாலைகள் பழுதடைந்திருந்தால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பொது அமைதி, பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தவித இடையூறுமின்றி, அரசின் விதிகளை முழுமையாக பின்பற்றி விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.