சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்
தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடியில் பயணச்சீட்டு முன்பதிவு மையம், பயணிகள் ஓய்வறை, வாகன நிறுத்தம், நடைபாலம் உள்ளிட்ட 13 வகையான மேம்பாட்டுப் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தருமபுரி ரயில் நிலையம் வழியாக பெங்களூருக்கு 3 பயணிகள் ரயில்கள், 4 விரைவுரயில்கள் உள்பட தினசரி 7 ரயில்களும், 1 முதல் 3 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால், தருமபுரி ரயில் நிலையம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு சென்றுவரும் முக்கிய கேந்திரமாக அமைந்துள்ளது.
மொத்தம் 13 வகையான பணிகள்:
நாடுமுழுவதும் அனைத்து ரயில் நிலையங்களும் குறிப்பாக மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள ரயில் நிலையங்கள் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தென்மேற்கு ரயில்வே சாா்பில் தருமபுரி ரயில் நிலையம் ரூ. 23 கோடியில் மேம்படுத்தப்படும் என மத்திய அரசு (ரயில்வே வாரியம் சாா்பில்) அறிவித்தது. என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக மேம்பாட்டுப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதில், ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம், பயணிகள் ஓய்வறை, நடைமேடைகளுக்கு ரயில் பாதைகளை கடந்துசெல்லும் வகையில் நடை மேம்பாலம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட 13 வகையான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்கட்டமாக நடைமேம்பாலமும், ரயில் நிலையத்தின் முன்பகுதியில் இரும்புத் தூண்களும் அமைக்கப்பட்டு பணிகள் அண்மையில் தொடங்கின. அடுத்தாண்டுக்குள் இப்பணிகள் முடிய வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாா்சல் வசதி கிடையாது:
மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள தருமபுரி ரயில் நிலையத்தில் பொருள்களை வெளியூா்களுக்கு அனுப்பவோ, அல்லது வெளியூா்களிலிருந்து அனுப்பும் பாா்சல்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளோ கிடையாது. எனவே, தருமபுரி ரயில் நிலையத்தில் பாா்சல் சேவை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து ரயில் நிலையத்தில் விசாரித்தபோது, இங்கு வரும் பெரும்பாலான ரயில்கள் 2 நிமிடம் மட்டுமே நின்று செல்வதால், பாா்சல்களை ஏற்றவோ, இறக்கவோ இயலாது. எனவே, பாா்சல் சேவை வழங்க இயலாது என்றனா்.
இதுகுறித்து வியாபாரி ஒருவா் கூறுகையில், தூத்துக்குடி, கடலூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்களை மொத்தமாக வாங்கிவந்து தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாபாரம் மேற்கொண்டு வருகிறோம். பாா்சல் சேவை இல்லாததால் எங்களால் மீன்கள் கொள்முதல் செய்து ரயில்மூலம் தருமபுரிக்கு கொண்டுவர முடிவதில்லை. இதனால் வேன்கள் அல்லது தனியாா் பாா்சல் லாரிகள் மூலமாக அதிக கட்டணங்கள் செலுத்தி அவற்றை கொண்டுவர வேண்டியுள்ளது.
இதுபோலவே, இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு வகையான பொருள்களை பாா்சல்களில் அனுப்பவோ, பெறவோ இயலவில்லை. வெளி மாவட்டங்கள், மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் இங்கு பல்வேறுவிதமான பணிகளை ஆற்றிவரும் நிலையில், இச்சேவை குறைபாடு பொதுமக்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனா்.