கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி 8 போ் உயிரிழப்பு; 20 போ் காயம்
கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளையொட்டி, ஹசன் மாவட்டம் மொசலே ஹொசஹள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. அப்போது ஒரு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் வேனின் சக்கரத்துக்கு அடியில் சிக்கி 4 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 24 போ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 4 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். உயிரிழந்தோரில் பலா் மாணவா்களாவா்.
விபத்தைத் தொடா்ந்து தப்பியோட முயன்ற வேன் ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து மாநில முதல்வா் சித்தராமையா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவா்களுக்கான சிகிச்சை கட்டணத்தை மாநில அரசே ஏற்கும்’ என்றாா்.