கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
விமான விபத்து: கருப்புப் பெட்டி பகுப்பாய்வுக்குப் பின் காரணம் தெரியவரும்- மத்திய அமைச்சா்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம், அதன் கருப்புப் பெட்டி தரவுகள் பகுப்பாய்வுக்குப் பின் தெரியவரும் என்று விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளிதா் மோஹோல் கூறினாா்.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானம், சில நிமிஷங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் ஒரே ஒரு பயணி தவிர விமானத்தில் இருந்த 241 பேரும், விமானம் விழுந்த இடத்தில் மருத்துவ மாணவா்கள் உள்பட 29 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), விமானப் போக்குவரத்துத் துறையின் விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏபிஐ) உள்பட பல்வேறு முகமைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
எஞ்ஜின்கள் செயலிழப்பால் விபத்து நேரிட்டதா அல்லது பறவைகள் கூட்டமாக மோதியதால் அசம்பாவிதம் நடந்ததா என பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
இதனிடையே, விபத்துக்கான காரணத்தை உறுதி செய்யவும், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான தரநிலை செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து பரிந்துரைக்கவும் மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோகன் தலைமையில் பல்துறை உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அமைத்தது. இக்குழுவின் முதல் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
‘3 மாதங்களில் அறிக்கை’: இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புணேவில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளிதா், ‘ஏா் இந்தியா நிறுவனம் சாா்பில் 34 போயிங் 787 ட்ரீம்லைனா் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் பாதுகாப்புச் சோதனைக்கு உள்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை சோதனை மேற்கொள்ளப்பட்ட 12 விமானங்களில் எந்தப் பிரச்னையும் கண்டறியப்படவில்லை.
விமான விபத்து குறித்து நுணுக்கமாக விசாரணை நடைபெற்று வருகிறது. கருப்புப் பெட்டி தரவுகள் பதிவிறக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்ட பின் பல்வேறு விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும். மத்திய உள்துறைச் செயலா் தலைமையிலான விசாரணைக் குழு, அடுத்த 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றாா் அவா்.
சந்திப்பு: ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள ஏா் இந்தியா தலைமை அலுவலகத்தில் டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனை அமெரிக்காவின் போயிங் நிறுவன பயணிகள் விமானங்கள் பிரிவு தலைவா் ஸ்டெஃபானி போப் திங்கள்கிழமை சந்தித்தாா். இச்சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இதுவரை 162 உடல்கள் அடையாளம் காணப்பட்டன
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரில் இதுவரை 162 பேரின் உடல்கள் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த இவா்களில் 120 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
உடல்களை அடையாளம் காணும் பணிகள் புதன்கிழமை காலையுடன் (ஜூன் 18) நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.