வெளிநாட்டு சிறைகளில் 23,000 பாகிஸ்தானியர்கள்!
வெளிநாட்டு சிறைகளில் 23 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23,000 பாகிஸ்தானியர்களில், 12,156 பேர் செளதி அரேபியாவில் உள்ளதாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது.
எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் 5,292 பாகிஸ்தானியர்களும், பஹ்ரைனில் 450 பாகிஸ்தானியர்களும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றச் சம்பவங்களில் கைதாகி சிறையில் உள்ளனர்.
சராசரியாக 400 பாகிஸ்தானியர்கள் சீன சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், போதைப் பொருள் கடத்தல், கற்பழித்தல், வழிப்பறி, கொலை மற்றும் போலியான கரன்சி நோட்டுகளை அச்சடித்தது போன்ற குற்றச் சம்பவங்களில் சிறையில் உள்ளனர்.
கத்தாரில் 338 பாகிஸ்தானியர்கள் பணமோசடி, நிதி முறைகேடு, கொலை, பாலியல் தொல்லை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமன் நாட்டில் 309 பாகிஸ்தானியர்கள், மலேசியாவில் 255 பாகிஸ்தானியர்கள் இதுபோன்ற குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | மறுபக்கம்! பாகிஸ்தான் தாக்குதலில் தந்தையை இழந்து தவிக்கும் 6 குழந்தைகள்!