வெளிமாநில மதுபுட்டிகளை கடத்தி வந்த இளைஞா் கைது
திருவெறும்பூா் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே திருவெறும்பூா் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டதில்,
அவரிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் முத்தரசநல்லூா் பழூா் காந்தி நகரைச் சோ்ந்த ல. அஸ்வின் குமாா் (19) என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்தனா்.