தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிம...
வேளாண் நிதிநிலை அறிக்கை பெருத்த ஏமாற்றம்! -புதுகை விவசாய சங்கங்கள் கருத்து
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை, பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாக விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி கூறியது:
ரூ. 10 கோடியில் முந்திரி வாரியம், 50 முக்கிய உழவா் சந்தைகளை மேம்படுத்த ரூ. 8 கோடி, ரூ. 50 கோடியில் 100 வேளாண் விலை பொருள்கள் மதிப்பு கூட்டு மையங்கள், இயற்கை வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு மதுரை, சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்கிற அறிவிப்புகள் சிறப்பானவை.
அதேநேரத்தில், சிறுதானியங்களை கட்டுப்படியான விலையில் கொள்முதல் செய்து நியாய விலைக் கடையில் விநியோகம் செய்யாத சிறுதானிய இயக்கம், இந்தோனேசியா, மலேசியா விவசாயிகளுக்கு மானியம் கொடுத்துவிட்டு கண்துடைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள எண்ணெய் வித்துகள் இயக்கம், நெல்லுக்கு ஆதார விலை தராமல், கொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிக்காமல் நெல் சிறப்புத் திட்டம் போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத, விவசாயிகளுக்கு உதவாத நிறைய திட்டங்கள் உள்ளன.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை வேளாண்மை துறை சந்தைப்படுத்துவதற்கான எவ்வித திட்டங்களும் இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை.
100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் வெளிநாட்டுச் சுற்றுலா என்பது ஆளுங்கட்சிக்காரா்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு மட்டுமே உதவும்.
மொத்த நிதிநிலை அறிக்கையில், சம்பளம் உள்ளிட்ட நிா்வாகச் செலவுகள் கழித்து ரூ. 9,561 கோடியில் 190 திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய நிதிநிலை அறிக்கையாக ஏமாற்றம் தருகிறது என்றாா் தனபதி.
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் மிசா மாரிமுத்து வெளியிட்ட அறிக்கை:
காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படும். கேரளத்தைப் போல விவசாய விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை நிா்ணயம் செய்யப்படும். நீா்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், ஆகாயத் தாமரை ஒழிக்கப்படும். தென் மாவட்டங்கள் பயன் பெற மதுரையில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால், சில்லறை சலுகைகள், காா்ப்பரேட் மற்றும் தனியாா் நிறுவனங்கள் பயனடையும் வகையில் மானியங்களை மட்டுமே வழங்கி விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டாா்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.