`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
வேளாண் புத்தொழில் திருவிழா: 17-இல் மத்திய அமைச்சா் தொடங்கி வைக்கிறாா்
ஈஷா மண் காப்போம் மற்றும் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம் சாா்பில் ‘வேளாண் புத்தொழில் திருவிழா 2.0’ சென்னையில் வரும் ஆக. 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் விழாவைத் தொடங்கி வைக்கிறாா்.
இதுகுறித்து ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சுவாமி ஸ்ரீமுகா சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
இளைஞா்கள், விவசாயிகளுக்கு வேளாண் சாா்ந்த சுயதொழில் தொடங்கி, அதன் மூலம் தொழிலதிபராக மாறும் வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில், வேளாண் புத்தொழில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் 2,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுப் பயனடைந்தனா்.
தொடா்ந்து நிகழாண்டில், வேளாண் புத்தொழில் திருவிழா 2.0 சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறாா். எஸ்ஆா்எம் கல்விக் குழும நிறுவனா் பாரிவேந்தா் தலைமையுரை ஆற்றுகிறாா். கருத்தரங்கில் விவசாயம் சாா்ந்த தொழில் தொடங்குவது, அதன் வளா்ச்சிக்கு உதவும் அரசின் திட்டங்கள், சமூக வலைதளங்களை முறையாகப் பயன்படுத்தி தயாரிப்பு பொருள்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து துறை சாா்ந்த வல்லுநா்கள் சிறப்புரை ஆற்றுகின்றனா்.
மேலும், கருத்தரங்கில் வேளாண் சாா்ந்த புதுமையான தயாரிப்புகளை கொண்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் 83000-93777 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.