அசோக் லேலண்டின் நிகர லாபம் புதிய உச்சம்
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிலும் அந்த நிதியாண்டு முழுமையிலும் அதிகபட்ச நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
204-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 38.4 சதவீதம் அதிகரித்து ரூ.1,246 கோடியாக உள்ளது. இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.900 கோடியாக இருந்தது.
கடந்த மாா்ச் 31-இல் முடிவடைந்த நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,303 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,618 கோடியாக இருந்தது.
கடந்த நிதியாண்டிலும், அந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிலும் பதிவான நிகர லாபங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் அதிகபட்சம் ஆகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.