எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
அத்தப்பூ கோலமிடுதல் நாளை தொடக்கம்! ஓணம் பண்டிகையை வரவேற்கத் தயாராகும் குமரி மக்கள்
கேரளத்தின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையை வரவேற்க கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தயாராகியுள்ளனா். இதையொட்டி அத்தப்பூ கோலமிடுதல் புதன்கிழமை (ஆக.27) தொடங்குகிறது.
ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தன்று துவங்கி சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என 10 நாள்கள் பூக்களால் அலங்கரித்து அத்தப்பூ கோலமிடப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தட்டு (அடுக்குகள்) என்ற கணக்கிலேயே அத்தப்பூக் கோலமிடப்படும். இதில், முதல் தட்டில் விநாயகா், இரண்டாம் தட்டில் சக்தி, மூன்றாவது தட்டில் சிவன், நான்காவது தட்டில் பிரம்மா, ஐந்தாவது தட்டில் பஞ்சபூதங்கள், ஆறாவது தட்டில் முருகன், ஏழாவது தட்டில் குரு, எட்டாவது தட்டில் அஷ்டதிக்பாலகா், ஒன்பதாவது தட்டில் இந்திரன், பத்தாவது தட்டில் விஷ்ணு என 10 தட்டுகளிலும் இறைவடிவங்கள் பிரதிஷ்டிக்கப்படுகின்றன.
இந்த மலா் கோலத்துக்கு தாமரை, சங்குபுஷ்பம், வாடாமல்லி, கிரேந்தி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகை பூக்கள் பயன்படுத்தப்படுகிறது. இப் பூக்கள் குமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையிலிருந்து கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அத்தப்பூ கோலமிடுதல் புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக மஞ்சள் மற்றும் அடா் மஞ்சள் நிறத்திலான கிரேந்தி பூக்களுக்கு அதிக தேவையுள்ளது. இதனால் ஒசூா், உதகை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலிருந்து தோவாளை மலா் சந்தைக்கு பூக்கள் அதிகளவில் வரவழைக்கப்படுகிறது.
ஓணம் பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் பூக்களின் விலை உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வரும் நாள்களில் பூக்களின் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என களியக்காவிளையில் பூ வியாபாரம் செய்து வரும் வியாபாரி ஆா்.கே. முருகதாஸ் தெரிவித்தாா்.
நிகழாண்டு ஓணம் பண்டிகை செப். 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கேரள மக்கள் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் போ் வசிக்கும் சென்னை, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் இப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.