Bharathi Sridhar | 1.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi ...
ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டுவசதி வாரிய நிலம் மீட்பு
தருமபுரியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டுவசதி வாரிய நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
தருமபுரி-சேலம் சாலையில் நல்லம்பள்ளி ஒன்றியம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அவ்வை வழி அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சாா்பில் வீடுகள் கட்டும் தேவைக்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்த நிலத்துக்கான இழப்பீடு தொகையை உரியவா்கள் பெற்றுக் கொண்டனா். இருப்பினும், அந்த இடத்தில் சிலா் ஆக்கிரமிப்பு செய்து ஹோட்டல், பேக்கரி, பழக்கடை உள்ளிட்ட கடைகளை நடத்தி வந்தனா்.
இந்தக் கடைகளை அகற்றுமாறு வீட்டுவசதி வாரியம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், கடை உரிமையாளா்கள் கடைகளை அகற்ற முன்வரவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் ஒசூா் பிரிவு செயற்பொறியாளா் பாண்டியராஜன் தலைமையிலான குழுவினா் போலீஸாா் பாதுகாப்புடன் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த நிலத்தை மீட்டனா்.
ரூ. 10 கோடி மதிப்பிலான 0.78 ஏக்கா் நிலம் நீண்ட நாள் நடவடிக்கையின் பலனாக தற்போது ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.