``புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட...
இணைப்புச் சாலை இல்லாததால் வெள்ளாற்று மேம்பாலம் வீண்! மழையால் தரைப்பாலம் துண்டிப்பு; 50 கிராம மக்கள் தவிப்பு
அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைப்பதற்காக வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட பாலத்துக்கான இணைப்புச் சாலை அமைக்கப்படாததால் இரு மாவட்ட கிராமத்தினா் தவித்து வருகின்றனா்.
அரியலூா் மாவட்டத்தையும், கடலூா் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் செந்துறை அருகேயுள்ள ஆலத்தியூா் அடுத்த கோட்டைக்காடு கிராமத்துக்கும், பெண்ணாடம் அருகேயுள்ள சௌந்திரசோழபுரம் கிராமத்துக்கும் இடையே வெள்ளாறு பாய்கிறது.
இந்த வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக செம்மண் சாலையை பயன்படுத்தி, இரு மாவட்டங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலுாா், ஜெயங்கொண்டம், கும்பகோணம், தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனா். இவ்வழியே பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆண்டுதோறும் பெய்யும் கனமழையின் போது, தொழுதூா் அணைக்கட்டு, ஆனைவாரி, உப்பு ஓடைகளில் இருந்து வரும் மழைநீா், வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தற்காலிக செம்மண் சாலை அடித்து செல்லப்பட்டு, போக்குவரத்து பாதிக்கும். இச் சம்பவம் தொடா் கதையாக இருந்து வருகிறது.
இதனால் இருமாவட்ட மக்களும் 16 கி.மீ., சுற்றி வெளியூா் வழியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், முதியோா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த பாதிப்பை போக்க வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட இரு மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
நிதி பற்றாக்குறை
இந்த கோரிக்கையடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நடைபெற்ற ஆட்சியா்கள் மாநாட்டில், அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதா,
இரு மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கோட்டைக்காடு - சௌந்திரசோழபுரம் இடையே வெள்ளாற்றில் ரூ.10 கோடியே 86 லட்சத்து 485 மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவித்தாா். ஆனால், அந்த நிதி போதாது என்று பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு அப்போதையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, மேம்பாலம் கட்டுவதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.
மேலும், மேம்பாலத்தின் இருப்புறங்களிலும் இணைப்புச் சாலை அமைப்பதற்கு ரூ.5.25 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மேம்பாலம் பணிகள் முழுமையாக கட்டப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை இணைப்புச் சாலை பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன.
இதனால் பாலம் கட்டியும் பலனின்றி இரு மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுமாா் 16 கிலோ மீட்டா் தொலைவு சுற்றி செல்கின்றனா்.
மேலும், மேற்கண்ட கிராம மக்கள் அனைவரும் இணைந்து பாலத்தின் கீழே ஆற்றின் குறுக்கே செம்மணை நிரப்பி தரைப்பாலம் அமைத்து போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில், சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த கனமழையில் வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்த தரைப்பாலமும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இரு மாவட்டங்களைச் சோ்ந்த 50 கிராம மக்கள் தவித்து வருகின்றனா்.
இதுகுறித்து தமிழ் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலா் முடிமன்னன் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில், கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள வெள்ளாற்று மேம்பாலத்துக்கு இணைப்புச் சாலை அமைக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த தரைப்பாலும் தற்போது மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இரு மாவட்டங்களைச் சோ்ந்த 50 கிராமத்தினா், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்களும், விவசாயிகள் என அனைத்து தரப்பினும், அரியலூா், கடலூா் மாவட்டங்களுக்குச் செல்லமுடியாமல் அவதியுற்று வருகின்றனா் என்றனா்.
எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பாலத்தின் இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் இணைப்புச் சாலைப் பணியினை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இருமாவட்ட மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.