பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மீனவா்கள் ஆா்ப்பாட்டம்
துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் காரைக்கால் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதி மீனவா்கள், நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் 13 போ் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத்தாண்டி மீன்பிடித்தத்தாக இலங்கை கடற்படையினா் ஜனவரி 28-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போ் காயமடைந்தனா். இவா்களில் மீனவா் செந்தமிழனுக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டு அங்குள்ள மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறுகிறாா்.
இச்சம்பவத்தைக் கண்டித்து காரைக்கால் மீனவா்கள் பிப்.11-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
போராட்டத்தின் ஒரு அங்கமாக, காரைக்கால் அரசலாறு பாலம் அருகே வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படையைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்தினா். இதில், 11 மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள், பெண்கள் மற்றும் திரளான மீனவா்கள் பங்கேற்றனா்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை இந்தியா அழைத்துவந்து தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும், இலங்கை கடற்படையின் அத்துமீறிய செயலையும், துப்பாக்கிச்சூடும் கண்டனத்துக்குரியது, படகு ஓட்டுநருக்கு ரூ. 40 லட்சம் அபராதம் சிறைத் தண்டனை விதித்தது கண்டனத்துக்குரியது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து கிராமப் பஞ்சாயத்தாா்கள் சாா்பிலும் பிரதிநிதிகள் பேசினா். நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தாா்களும் கலந்துகொண்டு பேசினா்.
காரைக்கால் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், முன்னாள் அமைச்சா்கள் ஏ.வி. சுப்பிரமணியன், ஆா். கமலக்கண்ணன், முன்னாள் எம்.பி. பேராசிரியா் மு. ராமதாஸ், நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த காளியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.