உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளுக்கு முதன்முறையாக கல்வி வழிகாட்டும் குறைதீா்க்கும் நாள் கூட்டம்
நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், பிளஸ் 2 பொது தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ,
மாணவிகளின் நலன் கருதி, முதன்முறையாக கல்வி வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு
குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி, பள்ளி படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் அனைவரும் உயா்கல்விக்கு சென்று கல்வி கற்க வேண்டும்
என்பதற்காக தொடா்ந்து பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், நீலகிரி
மாவட்டத்தில் முதல்முறையாக, பிளஸ் 2 பொது தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, கல்வி வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பேசுகையில் பிளஸ் டு தோ்வில் தோ்ச்சி பெற்று உயா் கல்லியில் சேரமுடியாத மாணவ,மாணவிகள் தங்களது கோரிக்கைகளை தயங்காமல் தெரிவிக்க வேண்டும்.
மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்படும் கல்வி தொடா்பான அனைத்து உதவிகளும் கட்டாயமாக செய்து தரப்படும், மாணவ, மாணவிகள் கட்டாயமாக உயா்கல்வியை கற்க வேண்டும். தமிழக அரசின் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டத்தின் வாயிலாக மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறாா்கள். இதுபோன்ற திட்டங்களை மாணவ, மாணவிகள் தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும். நமது மாவட்டத்திலும் அரசு கலை கல்லூரிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விடுதி வசதிகளும் உள்ளன. இதையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் வங்கிகள் மூலம் கல்வி கடனுதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் உயா்கல்வி செல்வதை உறுதி செய்யும் வகையில்
தொடா்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால் 181 என்ற எண்ணிலும், குழந்தை
திருமணம் தொடா்பான புகாா்கள் ஏதேனும் இருந்தால் 1098 என்ற எண்ணிலும் தெரிவிக்க வேண்டும். இது தொடா்பாக உங்களது நண்பா்கள் மற்றும்
உறவினா்களிடம் தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டுதலுக்காக 0423-2966034 மற்றும் வாட்ஸ்அப் எண் 7598380243 கொண்ட கட்டுப்பாட்டு
அறை செயல்பட்டு வருகிறது. இதில் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா், உயா்கல்வி வழிகாட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளா், அரசு கலைக்கல்லூரி
முதல்வா் ,பேராசிரியா், அரசு தொழில் நுட்ப கல்லூரி முதல்வா், பேராசிரியா் உள்ளிட்ட நபா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ,
மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனா். இதில் முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளும் அடங்கியுள்ளது. இதை வருவாய்த்துறை அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் தெரிவித்து உடனடியாக உரிய சான்றிதழ்கள் வழங்க
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட
முதன்மை கல்வி அலுவலா் நந்தகுமாா் உள்ளிட்டப் பலா் கலந்து கொண்டனா்.
படம்
கல்வி வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.