ஒருவர் கூறுவதை பொறுமையாக கேட்க முடியாமல் போனது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 3
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
"அமைதியுடன் காத்திருக்க வலிமை வேண்டும்"
நினைத்தது உடனே நடந்து விட வேண்டும் இல்லை என்றால் ஏதோ மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது போல் வருந்துகின்றனர் இன்றைய தலைமுறையினர் பலர். இன்னும் ஒரு சிலர் சிறிய தோல்விகளையும் , அவமானங்களையும் கூட தாங்க இயலாமல் தங்கள் உயிரையே மாய்த்து கொள்வது நம் வருங்கால தலைமுறை மீது ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது. இவர்களுக்கு பொறுமையின் அவசியத்தை கற்பிக்க வேண்டியது நம் கடமையில் ஒன்றல்லவா.
பொறுமை என்றால் என்ன?
நீங்கள் சிரமங்களை எதிர் கொள்ளும் போதும், போராடும் போதும், காத்திருக்கும் போதும், நிதானமாகவும் அமைதியாகவும் எதிர்வினையாற்றுவது தான் பொறுமை. இது பலவீனமல்ல, இதுதான் பலம். பொறுமையான நபர்கள் அவ்வளவு விரைவாக எதையும் விட்டுக்கொடுக்கவோ அல்லது கடுமையாக எதிர்வினையாற்றவோ மாட்டார்கள்; மாறாக, அவர்கள் சகிப்புத்தன்மையுடனும், முதிர்ச்சியுடனும் சவால்களைக் கையாளுகிறார்கள்.

ஏன் நாம் பொறுமை இழக்கிறோம்:
நவீன வாழ்க்கை நம்மை முன்பெப்போதும் இல்லாததை விட அமைதி அற்றவர்களாக ஆக்கியுள்ளது.
அதிவேகமான இணைய சேவை, ஒரு நிமிட செய்திகள், ஆர்டர் செய்தால் பத்து நிமிடத்தில் டெலிவரி, என இந்த தொழில்நுட்பம் "பொறுமையா அப்டினா என்ன" என்று கேட்க வைக்கிறது. ஒரு அரை மணி நேரம் கூட காத்திருக்க முடியாத நபர்களாக நம்மை மாற்றி விட்டது.
நீண்ட வேலை நேரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் தனிப்பட்ட போராட்டங்கள் என மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை சகிப்புத்தன்மையை நம்மிடமிருந்து உறிஞ்சி எடுத்துவிடுகிறது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, தவறான பழக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என மனிதன் ஒழுங்கீனமாக திசையில் தன வாழ்க்கையை திருப்பி கொள்கிறான்.
அடுத்தவரின் வெற்றியை, வாழ்க்கை முறையை நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்து நாம் விரக்தி அடைகிறோம். அவர் எவ்வாறு வெற்றி அடைந்தார், எவ்வளவு காலம் கடின உழைப்பு இருக்கிறது, என்பதை பற்றி பெரும்பாலானோர் யோசிப்பதே இல்லை. இவ்வளவு காலமாக நாம் வெற்றி அடைய வில்லையே என்று பொறுமை இழந்து கவலையில் மூழ்கிவிடுகின்றனர்.
நாம் டிராபிக் சிக்னலில் நிற்கும் போது, பச்சை சமிக்கை வருவதற்குள் எத்தனை பேர் ஹாரன் அடித்து கொண்டே இருக்கிறார்கள் அறுபது வினாடிகள் கூட பொறுமையை கடைபிடிக்க முடியாத மனிதர்களா நாம்? பொறுமையின்மை அவ்வளவு இயல்பாகிவிட்டது.
பொறுமை ஏன் முக்கியமானது?
சிறந்த முடிவுகளை எடுக்க பொறுமை மிகவும் அவசியமாகிறது, நீங்கள் ஒரு செயலை செய்வதற்கு முன்பு தெளிவாக சிந்திக்க உங்களுக்கு நேரத்தை தருகிறது பொறுமை. அவசர அவசரமாக முடிவை எடுத்துவிட்டு பின் தவறான முடிவு என்று வருத்தப்படுவதற்கு பதிலாக, நிதானமாக சிந்தித்து நல்ல முடிவை எடுக்கலாம்.
ஒருவர் கூறுவதை பொறுமையாக கேட்பது, ஒருவருக்காக காத்திருப்பது, ஒருவரை மன்னிப்பது ஆகியவை உறவுகளை வலுப்படுத்துகிறது. கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் அவன் வாழ்க்கையே மாறியிருக்கும் என்ன சிலர் கூறுவதுண்டு.. நம்மை கோபத்திலிருந்தும், வருத்தத்திலிருந்தும் காக்கிறது பொறுமை.
தனிப்பட்ட வளர்ச்சிக்கு பொறுமை மிக அவசியம், சிறந்த இலக்குகளை ஒரே நாளில் அடைந்துவிட முடியாது.

பொறுமையை ஒரு பழக்கமாக மாற்றுங்கள்:
உடனடியாக நாம் நினைப்பது நடந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இயற்கையை கவனியுங்கள், விதைகள் மரங்களாக வளர பல வருடங்கள் ஆகிறது, மழை நீர் பல வருட உழைப்பினால்தான் மலைகளை செதுக்குகிறது.
முதலில் செயல்படும் முன் சிந்தியுங்கள், இந்த முடிவை நான் எடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று. இது நீங்கள் அவசர படாமல் இருக்க உதவும். இதை நீங்கள் அன்றாட வாழ்வில் செய்கின்ற சிறு சிறு செயல்களில் கூட முயற்சித்து பாருங்கள்.
மக்களிடம் சகிப்புத்தன்மையுடன் இருங்கள் இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் தான். சில நேரங்களில் நமக்கு அறிவுரை கூறும் மனிதர்களை நாம் கேலி செய்கிறோம், சகித்துக்கொள்ளாமல் போதும் நிறுத்துங்கள் இது எனக்கே தெரியும் என்று முற்றுப்புள்ளி வைத்து விடுகிறோம்.
ஆனால் தோழர்களே, அறிவுரைகளை கேளுங்கள் அவை இப்போது உங்களுக்கு பயனற்றது போல தோன்றினாலும், உங்கள் வாழ்க்கையில் என்றேனும் ஒரு நாள் அது உதவலாம். அல்லது மற்றவரின் இக்கட்டான சூழ்நிலையில் போது அதே அறிவுரையை நீங்கள் அவர்களுக்கு கூறலாம்.
"அன்னக்கி ஒருத்தர் கிட்ட பேசிட்டு இருந்தேன் , அவரு இப்படி ஒரு அட்வைஸ் பண்ணாரு, இது உங்களுக்கு இப்போ பயன்படும்னு நினைக்கிறேன்".
எல்லாவற்றையும் நம் அனுபவத்தில் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இந்த ஒரு வாழ்க்கை போதாது.
"நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்."
ஒருவர் தன் நற்பண்புகளையும், உயர்ந்த குணங்களையும் என்றும் நிலைத்து வைத்திருக்க விரும்பினால் அவர் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கற்பிக்கிறார்.
பொறுமையே மனிதனின் குண நலன்களை பாதுகாக்கும் அடிப்படை.
அடுத்த கட்டுரையில் சந்திப்போம்..
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!