நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்...
``கர்நாடகா காங்கிரஸில் அதிகார மாற்றமா?'' - தொடரும் கேள்விக்கு காங்கிரஸ் தலைமை பதில்!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏ.ஐ.சி.சி) பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து வருகிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போதே, சித்தராமையாவுக்கும் டி.கே. சிவகுமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவின. நீண்ட இழுப்பறிக்கு பிறகு மூத்த தலைவர்களின் பேச்சுவார்த்தை உறுதியைத் தொடர்ந்து டி.கே. சிவகுமார் துணை முதல்வர் பதவியை ஏற்றார்.
இந்த நிலையில், முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு அக்கட்சி நிர்வாகிகளுக்குள் எழுந்துள்ளது. இந்த நிலையில், ராமநகர காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன், ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை சந்திப்பதற்கு முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ``கர்நாடக முதல்வரை மாற்றவில்லை என்றால், 2028 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது. 137 எம்எல்ஏக்களில் நூற்றுக்கும் அதிகமானோர் சிவக்குமாருக்கே ஆதரவாக இருக்கின்றனர். அவரை முதல்வராக்க வேண்டும். சிவகுமாரின் தலைமையே கட்சியின் 2023 வெற்றிக்கு முக்கியமானது. மேக்கேதாட்டு பாதயாத்திரையை ஏற்பாடு செய்வதில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது. இறுதி முடிவு கட்சி உயர் மட்ட நிர்வாகிகளிடமே இருக்கிறது என்றாலும், நான் தலைமையை மதிக்கிறேன், ஆனால் இங்கிருக்கும் உண்மை நிலையையும் சொல்கிறேன்” என்றார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சித்தராமையாவும், சிவக்குமாரும் நேற்று ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சித்தராமையா, ``எங்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலையில்லை, நாங்கள் (சிவகுமாரும் - சித்தராமையாவும்) ஒற்றுமையாகவே இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களுடனான தனது சந்திப்புகளுக்கும் தலைமை மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சுர்ஜேவாலா திட்டவட்டமாக மறுத்துள்ளார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சிவகுமாரின் அருகில் நின்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ``சமீபத்திய சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்பட எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் செயல்திறன் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இந்த சந்திப்புகள் இருந்தது.

அவர்கள் தங்கள் தொகுதிகளில் என்ன வேலை செய்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். அவர்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வது முக்கியம். பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் போன்ற கட்சியின் முதன்மையான உத்தரவாதத் திட்டங்களின் செயல்பாட்டுத் திட்டத்தை கண்காணிப்பதும் இந்த மதிப்பீட்டில் அடங்கும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அவற்றை செயல்படுத்துவது குறித்த "அறிக்கை அட்டைகளை" சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உள் பிரச்னைகளை கட்சி மன்றங்களுக்குள் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்குள் ஏதேனும் பிரச்னை இருந்தால், அதைக் கட்சித் தலைமையிடம் தெரிவியுங்கள்." என்றார்.