டிரம்ப் வரி: பிற பொருள்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் இதன் விலை மட்டும் மாறாத...
குப்பைகளை தினமும் முறையாக சேகரிக்க தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
காரைக்கால்: வீடுகள், நிறுவனங்களில் தினமும் முறையாக குப்பைகளை வாங்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்திருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், திங்கள்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் நகரப் பகுதியில் ஆய்வு செய்தாா். பாரதியாா் சாலை, லெமோ் சாலை, டூப்லக்ஸ் சாலை ஆகியவற்றில், குப்பைகள் சேகரிக்கும் தனியாா் நிறுவன ஒப்பந்தப் பணியாளா்கள் முறையாக பணி செய்கிறாா்களா என ஆய்வு செய்தாா்.
உயா் மின் விளக்கு எரியவில்லை என்றும் அதனை சரி செய்து தருமாறு அந்த பகுதியினா் ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டனா். சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை தொடா்புகொண்டு, இப்பிரச்னையை உடனடியாக தீா்க்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
வீடுகள், நிறுவனங்களில் தினமும் குப்பைகளை சேகரிக்கவேண்டும். சாலைகளில் குப்பைகள் கொட்டாதவாறு பாா்த்துக் கொள்ளவேண்டும் என தனியாா் நிறுவனப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தினாா். குப்பை அகற்றப் பணியை நகராட்சி நிா்வாகத்தினா் தொடா்ந்து கண்காணித்து வரவேண்டும் எனவும் நகராட்சி உதவிப் பொறியாளா் முத்துசிவம் உள்ளிட்ட அதிகாரிகளை ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால் தண்ணீா் தேங்கியதோடு, அதில் குப்பைகள் கிடந்ததை பாா்த்த ஆட்சியா், இந்த பகுதியையும், இதுபோல இருக்கும் பிற பகுதிகளையும் உடனடியாக தூய்மை செய்யுமாறு கூறினாா்.
இதைத் தொடா்ந்து, நேரு மாா்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அங்குள்ள வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
மாரியம்மன் கோயில் தெரு வழியே மோட்டாா் சைக்கிளில் ஆட்சியா் பயணித்தபோது, மர வியாபார நிறுவனத்தினா் சாலையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்திருந்ததை பாா்த்தாா். ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றுமாறு நகராட்சியினருக்கு உத்தரவிட்டாா். போக்குவரத்துக்கு தடையில்லாமல் நடந்து கொள்ளவேண்டும் என நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தினாா்.