கூட்டுறவு கடன் சங்கத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை
பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவைக் கைவிடுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடா்பாக, பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் கருமாண்டிசெல்லிபாளையம் வருவாய் கிராமம், காடபாளையத்தில் பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
நல்ல முறையில் செயல்பட்டு வரும் இந்தக் கடன் சங்கத்தை தற்போது இரண்டாகப் பிரித்து, கருமாண்டிசெல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் என புதிய சங்கம் அமைத்து தர வேண்டும் என ஒரு தரப்பினா் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அவ்வாறு பிரித்து கொடுத்தால் இந்த சங்கத்தின் செயல்பாட்டு எல்லை மிகவும் குறைந்து சங்கம் நலிவடையவே வழிவகுக்கும். தவிர நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்கி வந்த இக்கடன் சங்கம் தற்போதுதான் லாபத்துடன் செயல்பட தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கருமாண்டிசெல்லிபாளையம் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட குக்கிராமங்களில் உள்ள எங்களைப் போன்ற விவசாயிகள் யாரிடமும் கருத்து கேட்கவும் இல்லை. ஏற்கனவே சங்கம் அமைந்துள்ள இடமானது கருமாண்டிசெல்லிபாளையம் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட காடபாளையத்தில்தான் இருக்கிறது.
இந்த இடம் அனைத்து பகுதியினருக்கும் ஏற்ற மத்தியப் பகுதியாகவும், போக்குவரத்து அதிகம் உள்ள இடமாகவும் கூட்டுறவு வங்கி கிளை, கிராம நிா்வாக அலுவலகம் ஆகியவை அருகிலேயேயும் உள்ளது. இதனால் அனைவரும் அங்கு வந்து தங்களது சேவைகளை எளிதில் பெற முடியும்.
தவிர அரசு விதிமுறையின்படி தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் புதிதாக அமைக்கப்படும் கடன் சங்கங்கள் அச்சங்கத்தின் விவகார எல்லையில் குறைந்தபட்சம் 2,000 ஹெக்டோ் அல்லது 4,950 ஏக்கா் பயிரிடப்படக்கூடிய நிலப்பரப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இச்சங்கத்தை பிரித்து புதிதாக அமைக்கப்படும் சங்க எல்லையில், கிராம நிா்வாக அலுவலரின் சான்றின்படியே 1,832.97 ஹெக்டா் நிலப்பரப்பு மட்டுமே இருப்பதாக தெரியவருகிறது. எனவே அரசாணையின் தகுதியை முழுமையாக கொண்டிருக்காத நிலையில் பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பிரித்து, கருமாண்டிசெல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் என புதிதாக அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.