கேரளாவில் அவசரமாக தரையிறங்கிய உலகின் காஸ்ட்லியான ஃபைட்டர் ஜெட் - வானில் செய்யும் சாகசங்கள் என்னென்ன?
பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35 ஸ்டெல்த் போர் விமானம் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து 48 மணி நேரங்களுக்கும் மேலாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நிற்கிறது.
F-35 விமானம், UK-யின் வேல்ஸ் இளவரசரின் கடற்படை குழுவில் (Carrier Strike Group) இடம்பெற்றுள்ளது. இந்தக் கடற்படை குழுவானது இந்தோ - பசிபிக் கடல் பகுதியில் இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுவந்தது.
அப்போது, வானில் பறந்துகொண்டிருக்கும்போது எரிபொருள் தீர்ந்ததால் அவசரவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது. இராணுவ மற்றும் விமான நிபுணர்கள் இது மிகவும் அரிதான நிகழ்வு என்கிறார்கள்.
விமானத்தின் எந்திரத்தில் பிரச்னை இருக்கலாம் என்றும், அதை சரி செய்தி திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
Stealth Fighter Jet
ஒரு வெளிநாடு போர் விமானம் 48 மணிநேரத்துக்கு மேல் பிற நாட்டில் இருப்பது அரிதானது. அதுவும் F-35 உலகிலேயே விலையுயர்ந்த போர் விமானங்களில் ஒன்று. 5வது ஜெனரேஷன் ஸ்டெல்த் ஃபைட்டர் விமானங்களில் (stealth Fighter Jet) இதுவே விலை உயர்ந்தது.
stealth Fighter Jet என்றால் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைந்திருந்து தாக்கும் விமானம். இவற்றை ரேடாரில் எளிதாக கண்டுபிடித்துவிட முடியாது.
இது மிகவும் குறுகிய ஓடுபாதையில் மேலே ஏறவும், செங்குத்தாக இறங்கவும் முடியும். வழக்கமான போர் விமானங்களுக்கு தேவைப்படும் catapult systems உதவி இல்லாமலேயே விரைவாக டேக் ஆஃப் ஆகும். இதனால் பெரிய ரன்வே இல்லாத போர் கப்பல்களிலும் இது சிறப்பாக செயல்பட முடியும்.
The week has landed.
— F-35 Lightning II (@thef35) April 28, 2025
Start the week like you mean it. The F-35B isn’t just showing up—it’s showing off. pic.twitter.com/2TwLxATGaS
இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்த இந்த வகை விமானங்களைப் பயன்படுத்துகிறது.
இந்த விமானம் வானில் தங்கள் படைகளின் மேலாதிக்கத்தை நிறுவவும், தாக்குதல் நடத்தவும், மின்னணு போர் முறையிலும், உளவு தகவல்கள் சேகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
F-35 Lightning II விமானங்களில் F-35A, F-35B, F-35C என மூன்று வகை உள்ளது. இவை அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனத் தயாரிப்பாகும். இவற்றுள் F-35Bதான் மேற்கூறிய டேக் ஆஃப் மற்றும் தரையிறங்கும் சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும்.
இந்த விமானம் அதன் ரேடார், அகச்சிவப்பு அமைப்புகள் மற்றும் வெளிபுற உள்ளீடுகளைப் பயன்படுத்தி இலக்குகளைக் குறிவைக்கும்.
ஒற்றை எஞ்சின் கொண்ட இந்த விமானத்தில் ஒரு விமானி மட்டுமே பயணிக்க முடியும்.
இருக்கும் போர் விமானங்களிலேயே விமானிகளுக்கு வசதியான உள் அமைப்புகள் இதில்தான் இருக்கிறது என்கின்றனர். இதில் விமானி சட்டகத்தின் வழியாக நேரடியாக எதிரியை பார்த்து குறிவைக்க முடியும் என்கின்றனர்.
இது போர் களத் தகவல்களை உடனக்குடனாக தரை, வான் அல்லது கப்பலில் உள்ள மையத்துக்கு அனுப்புகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட 12 நாடுகள் இந்த விமானத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியாவிடம் இவை கிடையாது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியாவிற்கு F-35 ஜெட் விமானங்களை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் எனக் கூறியிருந்தார் ட்ரம்ப்.
இதுவரையில் அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை. !