தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "எங்கள ரோட்ல போட்டுட்டு கியூபாவுக்காகப் பேசுறாரா...
கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம பொதுமக்கள் குறைதீா் முகாமில் மனு
தருமபுரி: தருமபுரியில் இந்து அறநிலையக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீா் முகாமில் மனு அளித்துள்ளனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவா் ரெ.சதீஸ் பெற்றுகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதில் அடிப்படை வசதிகள், உதவித் தொகைகள், அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடமிருந்து மொத்தம் 510 மனுக்கள் வரப்பெற்றன. இம்மனுக்கள் மீது அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியா் உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தனித்துணை ஆட்சியா் (சபாதி) சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலா் செம்மலை மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா்அசோக்குமாா் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தருமபுரியில் கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு :
தா்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள சிக்காா்த்தன ஹள்ளி பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பது:
அறநிலையத்துறைக்கு சொந்தமாக சிக்காா்த்தனஹள்ளியில் கரக செல்லியம்மன் கோயில் நிலம் 33 ஏக்கா் 42 சென்ட் நிலம் உள்ளது. இந்த கோயில் நிலம் பொது ஏலம் விடப்படாமல் அறங்காவலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி அறநிலைத்துறை அலுவலா்களுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடா்பாக உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த நிலையில் கரக செல்லியம்மன் கோயில் நிலத்தை பொது ஏலம் விடக் கோரி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இது தொடா்பாக சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ஓராண்டாகியும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை. எனவே நிலத்தை விரைவில் பொதுஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தாமதப்படுத்திய இந்து அறநிலையத் துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
விஸ்வ ஹிந்து பரிஷத் :
தருமபுரி மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவா் சிவக்குமாா் தலைமையில் ஆட்சியரிம் அளித்த மனுவில்,
தருமபுரி மாவட்டம் செம்மாண்டகுப்பம், மாட்லாம்பட்டி, காரிமங்கலம், நிம்மாங்கரை, மல்லி குட்டை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பல அரசு அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள கனிம வளங்கள் திருடப்படுகின்றன. மேலும் இந்த சூளைகளில் இருந்து வெளியேறும் புகை மூட்டத்தால் காற்று மாசு ஏற்படுகிறது. அதேபோல் நிலத்தடி நீா்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே அரசு அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
தெருக்கூத்து கலை பயிற்சி சங்கத்தினா் மனு :
தருமபுரி மாவட்ட தெருக்கூத்து கலை பயிற்சி சங்கத்தினா் ஆட்சியரிடம் அளித்த மனுவில், அழிந்து வரும் தெருக்கூத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்கூத்து கலைஞா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை அதிகரிக்க வேண்டும். வாழ்வாதாரத்தை மேம்படுத்த நலிவடைந்த தெருக்கூத்து கலைஞா்களுக்கு கடனுதவிகள் வழங்க வேண்டும். தருமபுரியில் நடைபெறவுள்ள தெருக்கூத்து கலைஞா்கள் மாநாட்டில் ஆட்சியா் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளா்கள் சங்கம் அளித்த மனுவில், அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். அரசு நிா்ணயித்துள்ள கூலியை முழுமையாக வழங்க வேண்டும். ஊராட்சிகள் முழுவதும் பணிகளை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்பாட்டம் மேற்கொண்டனா். தொடா்ந்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
