கோவை: தன் வீட்டருகே விளையாடியதால் கோபம்; சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண்; நடந்தது என்ன?
கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் அருகே அம்மன் குளம் பகுதி உள்ளது. அங்குத் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.
அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எல் பிளாக்கில் பொன்வேல் (33) என்பவர் வசித்து வருகிறார்.

இவருக்கு 5 வயதில் ஒரு மகளும், 7 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர். இவரின் மகள் அருகில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
பொன்வேல் வீட்டின் அருகில் சௌமியா (50) என்ற பெண் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சௌமியா தன்னுடைய வீட்டில் 5 நாய்களை வளர்த்து வருகிறார். இதனிடையே, பொன்வேலின் மகள் தன்னுடைய வீட்டுக்கு அருகில் விளையாடியதால் சௌமியா கோபமடைந்துள்ளார்.
இதையடுத்து தன் நாயை வைத்து சிறுமியைக் கடிக்க வைத்துள்ளார். காயமடைந்த சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுதொடர்பாக சௌமியாவிடம் கேட்டதற்கு அவர் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பொன்வேல் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சௌமியாவைக் கைது செய்தனர். சௌமியாவின் மகன்கள் சூர்யா மற்றும் சந்தானம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறுமியைக் கடித்த நாயை, ப்ளூ கிராஸ் அமைப்பினர் மீட்டு காப்பகத்துக்குக் கொண்டு சென்றனர்.

சௌமியா குடும்பத்தினர் நாய்களை முறையாகப் பராமரிப்பதில்லை என்று தொடர்ந்து பல்வேறு புகார்கள் உள்ளன.
கடந்த 2023-ம் ஆண்டு இதேபோல நாயை விட்டு குழந்தையைத் தாக்கிய புகாரில் சௌமியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs