சகோதரரின் இறுதிச் சடங்கு: விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் பங்கேற்பு!
அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார், தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 ஊழியர்கள் பயணித்த நிலையில், லண்டன் தொழிலதிபர் விஸ்வாஸ் குமார் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆனால், விமானத்தில் விஸ்வாஸுடன் பயணித்த அவரது சகோதரர் அஜய் விபத்தில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், விபத்தில் காயங்களுடன் தப்பிய விஸ்வாஸ் குமார் சிகிச்சைக்கு பிறகு அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட அஜய்யின் உடலும் லண்டனில் இருந்து வந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விஸ்வாஸ் - அஜய்யின் சொந்த ஊரான, தாத்ரா - நகர் ஹவேலி மற்றும் டாமன் - டையூ யூனியன் பிரதேசத்தில் உள்ள டையூ மாவட்டத்துக்கு அஜய்யின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
இன்று காலை அஜய்யின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் தனது சகோதரரின் உடலை விஸ்வாஸ் சுமந்துச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஸ்வாஸ் மட்டும் தப்பியது எப்படி?
விமானத்தில் இருந்து உயிர் தப்பியது பற்றி விஸ்வாஸ் அளித்த பேட்டியில்,
”விமானம் புறப்படத் தொடங்கியபோதே பிரச்னை ஏற்பட்டது. திடீரென விளக்குகள் எரிந்தன. உடனே விமானம் வேகமாக இயங்கத் தொடங்கியது. அப்போதுதான் தரையில் விழுந்து, எரியத் தொடங்கியது
எனது இருக்கை இருந்த பக்கம் நல்லவேளையாக காலி தரைப் பகுதி இருந்தது. அடுத்த பக்கம் கட்டடங்கள் இருந்ததால், அங்கிருந்த யாருமே வெளியேற முடியவில்லை. என் அருகில் இருந்த அவசர கதவு உடைந்ததால், நான் வெளியே குதித்துத் தப்பினேன். எனது கையிலும் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக என்னைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்” எனத் தெரிவித்தார்.
விஸ்வாஸ் குமாரை கடந்த வாரம் நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.