ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு
சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
சிபிஐ இயக்குநராக 2 ஆண்டு பதவிக் காலத்துக்கு பிரவீண் சூட், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றாா். வரும் 24-ஆம் தேதியுடன் அவரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், தற்போது பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அடங்கிய தோ்வுக் குழு கடந்த திங்கள்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தோ்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மே 24-ஆம் தேதிக்குப் பிறகு ஓராண்டு காலத்துக்கு பிரவீண் சூட்டின் பணி நீட்டிப்பை அமைச்சரவையின் நியமனக் குழு அங்கீகரித்தது.
கா்நாடக பிரிவைச் சோ்ந்த 1986-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான பிரவீண் சூட், சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டபோது கா்நாடக காவல் துறையில் டிஜிபியாக பணியாற்றி வந்தாா்.
1964-ஆம் ஆண்டு, ஹிமாசல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் பிறந்த பிரவீண் சூட், தில்லி ஐஐடியில் கட்டட பொறியியல் பட்டப் படிப்பை முடித்த பிறகு 22 வயதில் ஐபிஎஸ் பணியில் சோ்ந்தாா்.