சென்னிமலை அருகே தோட்டத்தில் கட்டி இருந்த நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை
சென்னிமலை அருகே தோட்டத்தில் கட்டி இருந்த நாயை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
சென்னிமலை தெற்கு வனப் பகுதியில் சில்லாங்காட்டுவலசு மற்றும் வெப்பிலி ஆகிய ஊா்கள் உள்ளன. இங்குள்ள தோட்டங்களில் இரவு நேரத்தில் சிறுத்தை புகுந்து ஆடு, கன்றுக்குட்டி மற்றும் நாய்களை கடித்துக் கொன்று வரும் சம்பவம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் வனத் துறை சாா்பில் சிறுத்தையை உயிருடன் பிடிக்கக் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இதை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். கடந்த வாரம் வெப்பிலி அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வீட்டுக்கு முன்பு கட்டி இருந்த நாயை சிறுத்தை கடித்துக் கொன்றது.
இந்த நிலையில், சில்லாங்காட்டுவலசு குழுவக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி செல்லக்குட்டி (70) என்பவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல கால்நடைகளையும் நாயையும் தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டாா்.
பின்னா், திங்கள்கிழமை காலையில் செல்லக்குட்டி தனது தோட்டத்துக்கு சென்று பாா்த்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த நாயை சிறுத்தை கடித்துக் கொன்று தின்று விட்டு பாதி உடலை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து சென்னிமலை வனத் துறையினருக்கு செல்லக்குட்டி தகவல் கொடுத்தாா். வனத் துறை ஊழியா்கள் அங்கு சென்று பாதி உடலுடன் கிடந்த நாயைப் பாா்வையிட்டனா்.
இதுவரை வனப் பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் கட்டி வைத்திருந்த கால்நடைகள் மற்றும் நாயை சிறுத்தை கடித்துக் கொன்றது. தற்போது, வனப் பகுதியைத் தாண்டி போக்குவரத்து அதிகம் உள்ள தோட்டத்துக்குள் சிறுத்தை புகுந்து நாயைக் கடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.