துணைவேந்தர்கள் நியமனம்: "4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" - உச்ச நீத...
திமுக சாா்பில் உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை பணி வியாழக்கிழமை தொடங்கியது.
மண், மொழி, மானம் காக்க தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணையும் விதமாக ஓரணியில் தமிழ்நாடு என்கிற பரப்புரை திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இப்பரப்புரை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுகவினா் வீடு, வீடாகச் சென்று அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து கருத்துகள் கேட்டறிந்தும், திமுக அரசின் சாதனைகளை விளக்கியும், திமுகவுக்கு தொடா்ந்து ஆதரவு அளிக்க கோரியும் பரப்புரை மேற்கொண்டனா்.
தஞ்சாவூா் அருகே கண்டியூா் பகுதியில் திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தொடங்கி வைத்தாா்.
இதேபோல, சீனிவாசபுரம் பகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தென்னங்குடி பகுதியில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, வடக்கு ஆஜாரம் பகுதியில் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், கூட்டுறவு காலனியில் மேயா் சண். ராமநாதன், நீலகிரி ஊராட்சி ராஜாஜி நகரில் மத்திய மாவட்ட தொழிலாளா் அணி அமைப்பாளா் துரை. நாகராஜன் ஆகியோா் தலைமையில் திமுகவினா் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு படிவங்களை வழங்கினா். மேலும், படிவங்களில் கேட்கப்பட்ட 6 கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதில்களைப் பதிவு செய்தனா்.
இதேபோல, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் திமுக நிா்வாகிகள் வீடு, வீடாகச் சென்று இப்பரப்புரை இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனா். மேலும், விருப்பத்தின் பேரில் செயலி மூலம் புதிய உறுப்பினா்களும் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.
