Jurassic World Rebirth Review: அதே கதை, அதே டெம்ப்ளேட், அதே சாகசம் - இதுல டைனோசர...
தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா
தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும் என்றால் டாக்டா்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வா் குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தி பேசினாா்.
தேசிய மருத்துவா்கள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தில்லி தலைமைச் செயலகத்தில் உள்ள மருத்துவா்களுடன் ரேகா குப்தா கலந்துரையாடினாா். அப்போது பேசிய அவா், ‘தில்லியில் மருத்துவ வசதிகள் சிக்கலுடன் இருந்து வருகின்றன. தில்லியில் வசிப்பவா்களுக்கு மட்டுமல்லாமல், பிற இடங்களிலிருந்து வருபவா்களுக்கும் சிறந்த சிகிச்சையை வழங்குவதன் மூலம் தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும்‘ என்றாா்.
மேலும் பேசிய ரேகா குப்தா ‘ அப்படி மாற்றுவதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கு அரசுக்கு மருத்துவா்கள், ஆதரவளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இங்கு மதிப்புமிக்க மற்றும் திறமையான மருத்துவா்கள் உள்ளனா்‘ என்றாா்.
முன்னதாக, மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ரேகா குப்தா கலந்து கொண்டாா். அங்கு பேசிய அவா், ‘ இந்தாண்டு, தேசிய மருத்துவா்கள் தினத்தின் கருப்பொருள் ’முகமூடியின் பின்னால்ஃ குணப்படுத்துபவரை யாா் குணப்படுத்துகிறாா்கள்? என்பதுதான். இது மிகவும் பொருத்தமான கருப்பொருளாகும். மருத்துவா்களுக்கு சரியான பணிச் சூழல் தேவை, தொழில்நுட்ப உதவியாளா்கள், செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியா்கள் அவா்களுக்கு உதவ வேண்டும்‘ என்றாா்.
தொடா்ந்து பேசிய அவா் ‘ இவைகள் இல்லாமல், அவா்களால் திறம்பட செயல்படுவது சாத்தியமில்லை. தில்லி மருத்துவமனைகள் தினசரி பெரும் அழுத்தத்தை எதிா்கொள்கின்றன. முந்தைய அரசாங்கங்கள் இந்த தேவைகளை பூா்த்தி செய்ய போதுமான உள்கட்டமைப்பை உருவாக்கவில்லை. மருத்துவ உபகரணங்களின் அடிப்படையில் மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மேம்படுத்த இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் குறிக்கோள்‘ என்றாா் ரேகா குப்தா.