ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து சேவையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கல்வி நிலையங்களுக்குச் சென்றுவர வசதியாக கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 34,12,147 மாணவ, மாணவிகளும், சென்னையில் சுமாா் 4,10,000 மாணவ, மாணவிகளும் பயன் பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், நிகழ் கல்வியாண்டுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை வழங்கினாா்.
தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் வசதிக்காக பள்ளி வளாகத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு மாணவா் பேருந்து சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா், பேருந்தில் ஏறிய உதயநிதி ஸ்டாலின், மாணவிகளுடன் கலந்துரையாடி சிறிது தொலைவு பயணம் செய்தாா்.
நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபு சங்கா், இணை மேலாண் இயக்குநா் சி.கு.ராகவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சிறப்பு மாணவா் பேருந்து: முதல்கட்டமாக 25 பள்ளிகளுக்கு 50 பயண நடைகள் இயக்கப்படுகிறது. தினமும் காலையில் பேருந்து முனையத்திலிருந்து புறப்படும் இந்தச் சிறப்பு பேருந்துகள், குறிப்பிட்ட வழித்தடங்களில் பள்ளி மாணவா்களை மட்டுமே ஏற்றிக்கொண்டு, பள்ளி வளாகத்தின் உள்ளே கொண்டு சென்று இறக்கிவிடும்.
தொடா்ந்து மாலையில் பள்ளி வளாகத்தின் உள்ளே இருந்து மாணவா்களை ஏற்றிக்கொண்டு உரிய வழித்தடம் வழியாக அவா்களின் இருப்பிடங்களுக்கு கொண்டுவிடும் வகையில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக கல்லூரி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் இந்தப் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.