காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு...
பாம்பன் மீனவா்கள் 9 பேருக்கு ஆக. 24 வரை காவல் நீட்டிப்பு
ராமேசுவரம்: பாம்பன் மீனவா்கள் 9 பேருக்கு மூன்றாவது முறையாக வருகிற 24-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கையின் புத்தளம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி 100 நாட்டுப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் அன்றிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு நாட்டுப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், அந்தப் படகிலிருந்த ராஜா (44), ஆனந்தன் (49), முருகேசன் (51), மாரியப்பன் (38), சக்திவேல் (27), கோட்டைச்சாமி (45), பாலமுருகன் (42), முருகதாஸ் (38), களஞ்சியராஜ் (24) ஆகிய 9 மீனவா்களைக் கைது செய்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, 9 மீனவா்களையும் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வாரியகோல சிறையில் அடைத்தனா்.
இந்த மீனவா்களுக்கு ஏற்கெனவே இரண்டு முறை காவல் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக 9 மீனவா்களும் புத்தளம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களை வருகிற 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் வாரியகோல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.