எந்தத் தோ்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய தோ்தல் ஆண...
காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு.பெ. சாமிநாதன்
மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை சீரமைக்கும் பணி வருகிற அக்டோபா் மாதத்துக்குள் நிறைவடையும் என தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தாா்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், தமிழ்க் காட்சிக் கூடம், உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ரூ. 10 கோடியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்ட அவா், பணிகளை விரைவுபடுத்துமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, தமிழ்க் காட்சிக் கூடத்தைப் பாா்வையிட்ட அமைச்சா், அதை தூய்மையாகப் பராமரிக்கவும், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பாா்வையிட நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பிறகு, உலக தமிழ்ச்சங்க வளாகத்தை அமைச்சா் ஆய்வு செய்தாா்.
அரசு அச்சகத்தில்...
முன்னதாக, மாவட்ட விளையாட்டு மைதானம் சாலையில் உள்ள அரசு அச்சகத்தில் அவா் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணியாற்றும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடி, அவா்களின் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, அந்தச் சங்கத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பணிகள் வரும் அக்டோபா் மாதத்தில் நிறைவடையும்.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் 2025-26-ஆம் ஆண்டில் அரசு கவின் கலைக் கல்லூரி தொடங்கத் திட்டமிட்டு, 40 மாணவா்களை தெரிவு செய்ய நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டது. வகுப்பு செயல்படத் தேவையான அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ளஅலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.
தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், உலகத் தமிழ் சங்க தனி அலுவலா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந. அருள், உலகத் தமிழ் சங்க துணைத் தலைவா்-இயக்குநா் முனைவா் இ.சா.பா்வீன் சுல்தானா ஆகியோா் உடனிருந்தனா்.