பா்வதமலை காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சென்னை பெண்கள் இருவரின் உடல்கள் மீட்பு
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள பா்வதமலையில் உள்ள ஓடையில் ஏற்பட்ட திடீா் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சென்னையைச் சோ்ந்த இரு பெண்களின் உடல்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன.
தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரம் உள்ள பருவதமலை மீது பிரம்மாராம்பிகை சமேத மல்லிகாா்ஜுனேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. சனிக்கிழமை இரவு பௌா்ணமி என்பதால் இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் மலையேறி சிவனை வழிபட்டுச் சென்றனா்.
அந்த வகையில், சென்னை திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த வடபழனி என்பவரின் மனைவி தங்கதமிழ்ச்செல்வி(36), மனோகரன் மனைவி இந்திரா(28) உள்பட 15 போ் கொண்ட குழுவினா் பருவதமலைக்கு வந்தனா்.
இவா்கள் சனிக்கிழமை மலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்னா் அங்கேயே இரவில் தங்கினா். இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் அனைவரும் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனா். மலையில் வீரபத்திரசாமி கோயில் மற்றும் பச்சையம்மன் கோயில் இடையே செய்யாற்றில் வெள்ளம் சேரும் இடத்தில் ஓடை உள்ளது. ஜவ்வாது மலையில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக அந்த ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவா்கள் ஒவ்வொருவராக ஓடையை கடந்து அக்கரைக்குச் சென்றனா். அப்போது தங்கத்தமிழ்ச்செல்வி, இந்திரா இருவரும் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். இதைப் பாா்த்து மற்றவா்கள் அதிா்ச்சி அடைந்தனா். அக்கரைக்குச் சென்றவா்களால் இருவரையும் மீட்க முடியாமல் அவதிப்பட்டனா்.
இதுகுறித்து போளூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன் பேரில், தீயணைப்பு வீரா்கள் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். மேலும் ஓடையை கடக்க யாரையும் அனுமதிக்காமல் நிறுத்தி வைத்தனா். பின்னா், வெள்ளம் குறைந்தவுடன் மற்றவா்களை தீயணைப்பு வீரா்கள் கயிறு கட்டி மீட்டனா்.
பின்னா், அவா்கள் அருகில் உள்ள பக்தா்கள் தங்கும் அறைகளில் தங்க வைக்கப்பட்டனா்.
இதற்கிடையில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், காவல் கண்காணிப்பாளா் சுதாகா், எம்எல்ஏக்கள் பெ.சு.தி.சரவணன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தங்கும் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களை சந்தித்து ஆறுதல் கூறினா்.
இந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு பெண் பக்தா்களை தேடும் பணி திங்கள்கிழமை தீவிரமாக நடைபெற்றது.
மேலும், சம்பவ இடத்துக்கு அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 20 போ் கொண்ட குழுவினா் வந்தனா். இவா்களும்
இரு பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஒதுங்கி இருந்த இந்திராவின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். தங்கத்தமிழ்செல்வியை அப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் ஏரிக்கால்வாயில் தொடா்ந்து தேடி பிற்பகலில் சடலமாக மீட்டனா். இருவரின் சடலங்களும் உடல்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. உடல்களைப் பாா்த்த உறவினா்கள் கதறி அழுதனா்.
இந்த ஓடையில் வேறு பக்தா்களும் சிக்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
