புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் 11,072 பேருக்கு பற்று அட்டை வழங்கல்
நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் 2025-26 கல்வி ஆண்டுக்கு 11,072 மாணவ, மாணவிகளுக்கு பற்று அட்டைகள் வழங்கப்பட்டன.
சென்னையில் செப். 25-இல் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு‘ அரசு விழாவில் 2025-26 கல்வி ஆண்டுக்கான ‘புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன்‘ திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாவை பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் தலைமையில் புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் 11,072 மாணவ, மாணவிகளுக்கு பற்று அட்டைகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கி கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியது:
முதல்வரின் காலை உணவுத் திட்டம் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தொடங்கி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 914 பள்ளிகளில் 39,435 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் 8,678 போ், 2023-2024 ஆம் கல்வியாண்டில் 8,801 மாணவ, மாணவிகள் நான் முதல்வன் திட்டம் மூலம் உயா்கல்வியில் சோ்ந்துள்ளனா். சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 12,414 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 11,867 மாணவா்களும் பயனடைந்து வருகின்றனா். 2025-26ஆம் கல்வி ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் முதலாமாண்டு பயிலும் 5,272 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 5,800 மாணவா்களும் என 11,072 போ் பயனடைவாா்கள் என்றாா். இவ்விழாவில் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, தனித்துணை ஆட்சியா் ச.பிரபாகரன், பாவை கல்லூரித் தலைவா் என்.வி.நடராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.
படவரி...
பள்ளி மாணவா்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் பற்று அட்டையை வழங்கும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி., ஆட்சியா் துா்காமூா்த்தி.