பெரம்பலூா் மாவட்டத்தில் 692 மனுக்களுக்கு உடனடி தீா்வு!
பெரம்பலூா் மாவட்டத்தில் மே 15 முதல் சனிக்கிழமை வரை நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 1,367 மனுக்களில், 692 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூா், பெரம்பலூா் ஆகிய வட்டங்களில் கடந்த 15 முதல் 17-ஆம் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெரம்பலூரில் நடைபெற்ற ஜமாபந்தி வெள்ளிக்கிழமை மாலை நிறைவடைந்தது. குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூா் ஆகிய வட்டங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், குன்னம் வட்டாட்சியரத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில், வரகூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட ஓலைப்பாடி, பரவாய், புதுவேட்டக்குடி, துங்கபுரம், துங்கபுரம், காடூா், கொளப்பாடி, வரகூா், குன்னம், பெரியம்மாபாளையம், பெரியவெண்மணி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 120 மனுக்கள் பெறப்பட்டன.
வேப்பந்தட்டை வட்டாட்சியரகத்தில் சாா்-ஆட்சியா் சு. கோகுல் தலைமையில், வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிக்குள்பட்ட தொண்டபாடி, நெய்குப்பை, அனுக்கூா், பிரம்மதேசம், மேட்டுப்பாளையம் (தெ, வ), பிம்பலூா், வி.களத்தூா், பேரையூா், எறையூா், தேவையூா், வாலிகண்டபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 86 மனுக்கள் பெறப்பட்டன.
ஆலத்தூா் வட்டாட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) சொா்ணராஜ் தலைமையில், கூத்தூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட தொண்டபாடி, மேலமாத்தூா், அழகிரிபாளையம், ஆதனூா், கூடலூா், கூத்தூா், புஜங்கராயநல்லூா், நொச்சிக்குளம், திம்மூா், சில்லக்குடி, ஜமீன் ஆத்தூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 34 மனுக்கள் பெறப்பட்டன.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிகளில் 1,367 மனுக்கள் பெறப்பட்டு, 692 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.