திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்; கண்டிக்கும் அரசு - என்ன பிரச்னை?
இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பெரும் போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நடந்து வருகிறது.
இந்தப் போராட்டம் ஆஸ்திரேலியாவில் குடியேறி இருக்கும் அனைத்து வெளிநாட்டு மக்களுக்கும் எதிரானது.
இருந்தாலும், இது இந்தியர்களுக்கு எதிரான போராட்டம் என்று பார்க்கப்படுவதற்கான காரணம்... ஆஸ்திரேலியர்களுக்கு அடுத்ததாக அந்த நாட்டில் அதிகமாக இருக்கும் மக்கள் தொகை இந்தியாவினுடையது ஆகும்.
இந்தியர்களின் மக்கள்தொகை
2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், அங்கே கிட்டத்தட்ட 9.76 லட்சம் இந்தியர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள்தொகையே 2.6 கோடி தான்.
இந்தியர்கள் போக, பிற நாட்டினரும் ஆஸ்திரேலியாவில் அதிகம் குடியேறி இருக்கின்றனர்.

என்னப் பிரச்னை?
இது தான் ஆஸ்திரேலிய மக்களின் கோபத்திற்கு காரணம்.
'மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா' என்று பெயரிட்டு நடத்திவரும் போராட்டம் குறித்து போராட்டக்காரர்கள் கூறுவதாவது...
"ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெளிநாட்டு மக்கள் உள்நாட்டில் செயலாற்றுகின்றனர். உள்நாட்டு மக்களைப் பிரிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
அதனால், ஆஸ்திரேலியாவின் சொந்த மக்களுக்காகவும், கலாச்சாரத்திற்காகவும், தேசத்திற்காகவும், அதன் எதிர்காலத்தின் உரிமைக்காகவும் இந்தப் போராட்டம்" என்று தெரிவிக்கின்றனர்.
இந்தப் போராட்டம் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் நடக்கவில்லை.
ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், கான்பெர்ரா, அடிலெய்டு, பெர்த் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
அதிக இந்தியர்கள் எப்படி?
இந்தப் போராட்டத்தின்போது சில பதாகைகளில் இந்தியர்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ளது.
அவற்றில் முக்கியமான ஒன்று, '100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்குள் கிரேக்கர்கள் மற்றும் இத்தாலியர்கள் குடியேறியதை விட, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக இந்தியர்கள் குடியேறி இருக்கிறார்கள்' என்பது ஆகும்.
'எப்படி இவ்வளவு இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறினர்' என்ற கேள்வி எழுவது நியாயமானது தான்.
ஆனால், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இப்போது குடியேற தொடங்கவில்லை. 1800-ம் ஆண்டு காலக்கட்டத்திலேயே, கூலித் தொழிலாளர்களாக இந்தியர்களை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து சென்றனர் பிரிட்டிஷார்கள்.
1970-களில் வெள்ளையர் அல்லாதவர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்திய இனவெறி கொள்கையான 'வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை' ரத்து செய்யப்பட்ட பின்னர், அந்தக் காலக்கட்டத்தில் இந்திய இன்ஜினீயர்களும், 1990 காலக்கட்டத்தில் இந்திய ஐ.டி ஊழியர்களும் மெல்ல மெல்ல ஆஸ்திரேலியாவில் குடியேறத் தொடங்கினர்.

2006-ம் ஆண்டு அப்போதைய ஆஸ்திரேலிய அரசு, இந்திய மாணவர்களுக்கு எளிதாக குடியுரிமைப் பெற வழி செய்தது. இதன் விளைவே, தற்போதைய நிலை ஆகும்.
அதிக வெளிநாட்டினர் குடியேறும் டாப் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. இங்கு இருக்கும் எளிய சட்டதிட்டங்கள் தான் வெளிநாட்டினர் அங்கே அதிகம் குடியேறுவதற்கான காரணம் ஆகும்.
இதனால், இந்தியர்கள் தவிர்த்து, பிற நாட்டினரும் ஆஸ்திரேலியாவில் அதிகம் குடியேறி உள்ளனர்.
அரசாங்கம் என்ன சொல்கிறது?
ஆஸ்திரேலிய அரசாங்கமோ, இந்தப் போராட்டங்களைக் கண்டித்து, "இனவெறி மற்றும் இன மையவாதம் அடிப்படையிலான தீவிர வலதுசாரி செயல்பாடுகளுக்கு இந்த நாட்டில் இடம் கிடையாது" என்று கடுமையாக எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். விரைவில் ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.