இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 24 | Astrology | Bharathi Sridhar | ...
வனத்தில் தென்பட்ட அரிய பொக்கிஷம், உற்சாகத்தில் ஆய்வாளர்கள்! பின்னணி இதுதான்
அரியவகை உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக விளங்கி வரும் முதுமலை, பந்திப்பூர், மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய வனத்தில் `Striped hyena' எனப்படும் வரிக்கழுதைப்புலிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கில் மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றைக் காண்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் பல ஆண்டுகள் கழித்து பந்திப்பூர் வனப்பகுதியில் தற்போது வரிக்கழுதைப்புலியின் நடமாட்டம் தென்பட்டிருக்கிறது. இயற்கையின் தூய்மை காவலனாக இருந்து காட்டைப் பாதுகாக்கும் அரிய பொக்கிஷமான வரிக்கழுதைப்புலி தென்பட்டிருப்பது ஆய்வாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இது குறித்து வனவிலங்கு பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் கூறுகையில், " உலகில் வேகமாக அழிந்து வரும் வனவிலங்குகளின் பட்டியலில் வரிக்கழுதைப்புலி இனமும் இடம் பெற்று இருப்பது வேதனையான உண்மை. காட்டில் வாழும் வனவிலங்குகளையும் நம்மையும் கொள்ளை நோய்களிலிருந்து பாதுகாக்கும் மிகப்பெரிய தூய்மைப் பணியை வரிக்கழுதைப்புலிகள் செய்து வருகின்றன. விஷம் கலக்கப்பட்ட இறைச்சி, கால்நடைகளுக்கு மருந்தாக வழங்கப்பட்ட வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன.

முதுமலையில் இவற்றின் எண்ணிக்கை சுமார் 30 வரை மட்டுமே இருக்கக்கூடும். சத்தியமங்கலம், முதுமலை, பந்திப்பூர் ஆகிய காடுகளில் வனத்துறையால் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கி கேமராக்களில் இவை அரிதாகவே பதிவாகி வருகின்றன. தற்போது பந்திப்பூர் பகுதியில் தென்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக உயர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதற்கான சூழலை வனத்துறை அமைத்துக் கொடுக்க வேண்டும்" என்றனர்.