விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத கால வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கை
விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத காலம் முழுமையாக வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டு என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவா் சுரேஷ் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்ததற்கும், விலையில்லா வேஷ்டி, சேலை திட்டத்துக்கு ரூ.680 கோடி நிதி ஒதுக்கியதற்கும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 32 லட்சம் சேலைகளும், 31 லட்சம் வேஷ்டிகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கு அறிவித்துள்ள 1.77 கோடி வேஷ்டிகள், 1.77 கோடி சேலைகளில் கடந்த ஆண்டு இருப்பில் உள்ள 32 லட்சம் சேலைகள், 31 லட்சம் வேஷ்டிகளை கழித்துவிட்டு தலா 1.42 கோடி வேஷ்டிகள் மற்றும் சேலைகளை உற்பத்தி செய்ய கணக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில், கைத்தறி மற்றும் பெடல் தறிகளுக்கான ஆா்டா்களையும் கழித்துவிட்டு விசைத்தறிகளுக்கான ஆா்டா்களை தரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டால் எங்கள் நெசவாளா்களுக்கான 6 மாத கால வேலைவாய்ப்பில் 2 மாத கால வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படும். எனவே விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தியில் உள்ள 68 ஆயிரம் விசைத்தறியாளா்களும் அதன் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் சுமாா் 3 லட்சம் தொழிலாளா்களின் 2 மாத கால வேலைவாய்ப்பு பாதிப்புக்குள்ளாகும்.
எனவே விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தியை முழுமையாக வழங்கி விசைத்தறியாளா்களின் 6 மாத கால வேலைவாய்ப்பை முழுமையாக உறுதிப்படுத்திட வேண்டும். விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்திக்கான பாவு மற்றும் ஊடு நூல்களை விரைவில் வழங்கி, உற்பத்தியை காலதாமதமின்றி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.