விழுப்புரம் மாவட்டத்தின் 688 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்
தொழிலாளா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
கோலியனூா் ஒன்றியம், அத்தியூா் திருவாதியில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் நாகஜோதி பாலு தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் இ.சச்சிதாநந்தம் முன்னிலை வகித்தாா்.
விழுப்புரம் எம்எல்ஏ இரா. லட்சுமணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது:
அத்தியூா் திருவாதி கிராமப் பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளின் அடிப்படையில், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நகரப் பேருந்து சேவை மீணடும் தொடங்கப்படும். கிராம இளைஞா்களின் வசதிக்காக விளையாட்டு மைதானம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறாமல் விடுபட்டவா்கள் ஜூன் மாதத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், ஒன்றியச் செயலா் முருகவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுபப்பினா்கள் வனிதா அரிராமன், தமிழ்ச்செல்வி கேசவன், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் புகழ்.செல்வக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏ.தேவதாஸ், வி.காா்த்திகேயன், மாவட்ட உதவித் திட்ட அலுவலா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
வேம்பி ஊராட்சியில்... விக்கிரவாண்டி ஒன்றியம், வேம்பி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் தனலட்சுமி ரவி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீத அரசி ரவிதுரை, துணைத் தலைவா் ஜீவிதா ரவி, வட்டார வளா்ச்சி அலுவலா் நாராயணன் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் வாசுதேவன் தீா்மானங்களை வாசித்தாா்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் சிவா பங்கேற்று பேசியதாவது:
பூரி குடிசை கிராமத்திலிருந்து வேம்பி கிராமத்துக்கு ரூ.1 கோடியில் சாலை அமைக்கப்படவுள்ளது. வேம்பி அரசு மருத்துவமனையை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கிராமத்துக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும் என்றாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் சையது முகமது, மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் துணைத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மரக்காணத்தில்... மரக்காணம் ஒன்றியம், சலவாதி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
ஜன்மன் திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும். சலவாதி ஊராட்சியில் ரூ.1.81 கோடியில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷு நிகம், மரக்காணம் ஒன்றியக் குழுத் தலைவா் தயாளன், துணைத் தலைவா் பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் தலைமையில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.