காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண வலியுறுத்தல்
வீரர்கள் அவர்களை நன்றாக புரிந்துகொண்டால்.... என்ன சொல்கிறார் ராகுல் டிராவிட்?
கிரிக்கெட் வீரர்கள் அவர்களை நன்றாக அறிந்துகொள்ளும்போது அவர்களது திறன் மேலும் அதிகரிப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது.
உங்களை புரிந்துகொள்ளுங்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், கிரிக்கெட் வீரர் ஒருவர் அவரது அதிகப்படியான திறனை வெளிப்படுத்த அவரை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: டு பிளெஸ்ஸியைப் போலவே பேட்டிங் செய்த சிராஜ்..! வைரலாகும் விடியோ!
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நன்றாக கிரிக்கெட் விளையாடுவது, தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால், நான் மிகப் பெரிய வீரர்களுடன் இணைந்து பயணித்தபோது, அவர்களிடம் பொதுவான ஒரு விஷயத்தை என்னால் கவனிக்க முடிந்தது. அவர்கள் யார் என்பதை உண்மையில் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.
நீங்கள் யார் என்பதை நன்றாக புரிந்து வைத்திருந்தால், உங்களது முழுமையான திறனை வெளிப்படுத்த முடியும். சிறந்த கிரிக்கெட் வீரராக மாறுவதற்கான திறமை பலருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனுடன் சிறந்த மனிதராகவும் ஒருவர் வளர வேண்டும். கிரிக்கெட் விளையாடும்போதும், வெளியுலக வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட, ஒருவர் அவரை நன்றாக புரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களுக்குள் இருக்கும் சிறந்த விஷயத்தை உங்களால் மட்டும் வெளிக்கொண்டுவர முடியும் என்றார்.