5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? - பயிற்சியாளர் பதில்
Kerala: கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: கொந்தளிக்கும் கட்சிகள்.. கேரள பாஜக தலைவர் சொல்வது என்ன?
கேரள மாநிலம் அங்கமாலி இடவூர் சபை உறுப்பினரான கன்னியாஸ்திரி பிரீதிமேரி, கண்ணூர் தலசேரி உதயகிரி சபை உறுப்பினரான வந்தனா பிரான்ஸிஸ் ஆகியோர் சத்திஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி ஆகிய பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
சத்திஸ்கர் மாநிலம் நாராயண்பூரைச் சேர்ந்த மூன்று இளம் பெண்களை நர்ஸிங் படிக்க வைப்பதாக கூறி துர்க் ரயில் நிலையத்துக்கு கன்னியாஸ்திரிகள் அழைத்துச் சென்றதாகவும். ரயில் மூலம் அந்த 3 பெண்களையும் ஆக்ரா அழைத்துச் சென்று மதமாற்றம் செய்யவும் திட்டமிட்டிருந்ததாக கன்னியாஸ்திரிகள் மீது குற்றம்சாட்டி சத்திஸ்கர் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது கேரள மாநில கிறிஸ்தவ சபைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்திஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடந்துகொண்டிருக்கும் நிலையில், பஜ்ரங்தள் அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் கன்னியாஸ்திரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கேரளாவில் அரசியல் விவாதமாகவும் மாறி உள்ளது. கன்னியாஸ்திரிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
சத்திஸ்கரில் கைதுசெய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளின் வீட்டுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள சட்டசபை எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், "பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.
அதிலும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இது அதிகமாக நடக்கின்றன. இதற்கு முன்பும் சத்திஸ்கர், மத்தியபிரதேஷ், குஜராத், உத்தர்பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் நிறைய வழக்குகள் பதிந்துள்ளனர்.
கன்னியாஸ்திரிகள் அவர்களின் சபை ஆடைகளை அணிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் கிறிஸ்தவர்கள் அதிகமாக தாக்கப்படுகின்றனர். அதற்கு போலீஸாரும் ஆதரவாக உள்ளனர். சத்திஸ்கரில் வேண்டும் என்றே ஆள் கூட்டத்தை கூட்டி, பிரச்னை செய்து கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

கேரள மாநிலத்தை ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வாசவன் கூறுகையில், "பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு சங்பரிவார் அமைப்புகளும், அவர்களது அரசும் கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாடுமுழுவதும் அதிகரித்துள்ளன. மணிப்பூரில் நடந்த தாக்குதல் அதற்கு சாட்சியாகும். கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடருகின்றன. இதற்கு எதிராக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்" என்றார்.
இதற்கிடையே சத்திஸ்கரில் கைதுசெய்யப்பட்ட கன்னியாஸ்திரியை மீட்க கேரள மாநில பா.ஜ.க முயன்று வருகிறது.
இதுபற்றி கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "கன்னியாஸ்திரிகளை மீட்கும் நடவடிக்கைக்காக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் அனூப் ஆன்றணியை சத்திஸ்கருக்கு அனுப்பியுள்ளோம். தேவையானால் நானும் அங்கு சென்று நடவடிக்கை எடுப்பேன். சத்திஸ்கர் மாநிலத்தில் மதமாற்ற தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அதை கொண்டுவந்ததே காங்கிரஸ் அரசுதான்.

நான் நேற்று முன் தினம் முதல் சத்திஸ்கர் உள்துறை அமைச்சரையும் மற்றும் பா.ஜ.க மாநில தலைவரையும் தொடர்புகொண்டு பேசிவருகிறேன். ஆனால், காங்கிரஸ் இதை அரசியல் ஆக்கிறது. விஷ பிரச்சாரம் மூலம் மக்களை பயமுறுத்த வேண்டாம் என காங்கிரஸை கேட்டுக்கொள்கிறேன்.
கன்னியாஸ்திரிகள் வெளியே வரும்வரை அவர்களுக்கு ஆதரவாக கடைசிவரை பா.ஜ.க செயல்படும். இது கன்னியாஸ்திரிகள் மீதான குற்றச்சாட்டு மட்டுமே. அவர்களை இந்த வழக்கிலிருந்து மீட்டு வீட்டுக்கு கொண்டுவருவதுதான் எங்கள் பணி. பஜ்ரங்க்தள் என்பது தனி அமைப்பு. அவர்களுக்கும் பா.ஜ.க-வுக்கும் சம்பந்தம் இல்லை. கன்னியாஸ்திரிகளுக்கு நீதி வழங்க பா.ஜ.க நடவடிக்கை எடுக்கும்" என்றார்.